டெல்லி: இந்திய ரயில்வே தனது லாபத்தை அதிகரிக்க தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் செலவினை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக மின்சார கட்டணம் மற்றும் இயக்க கட்டண செலவைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கூடுதலாக 50 மெகாவாட் மின்சாரம் பாய்ச்ச தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டமானது பாரதிய ரயில் பிஜ்லி கம்பெனி லிமிடெட் நவம்பர் 28, 2019 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வருடத்துக்கு 110 கோடி ரூபாய் செலவு மிச்சமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நவம்பர் 20 முதல் ராஜஸ்தானில் BRBCL-ல் 10 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக செலுத்த தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 11.50 கோடி டாலர் சேமிப்புக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதன்படி, மின் கட்டணத்தை குறைக்கவும், இயக்க செலவைக் குறைக்கவும் ரயில்வே ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதன் படி ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 121 கோடி ரூபாய் வருடத்திற்கு மிச்சப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பாரதிய ரயில் பிஜ்லி என்ற நிறுவனம், அரசின் என்.டி.பி.ஐ நிறுவனம் மற்றும் இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ரயில்வே துறைக்காக குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனமாக உள்ளது. இது முறையே என்.டி.பி.சி மற்றும் ரயில்வேயின் பங்களிப்பை 74 சதவிகிதம் மற்றும் 26 சதவிகிதமாக கொண்டுள்ளது.
இதன் நான்கு யூனிட்களில் (ஒவ்வொரு யூனிட்டும் 250 மெகாவாட் திறன் கொண்டது) மூன்று யூனிட்களில் இருந்து ஏற்கனவே இந்திய ரயில்வேக்கு மின்சாரம் வழங்க தொடங்கியுள்ளது. இதில் இதன் முதல் யூனிட் கடந்த ஜனவரி 2017ல் தொடங்கியது. அதிலும் இந்த ஆலையின் முக்கிய பயனாளி ரயில்வே துறை என்றும் கூறப்படுகிறது. இதன் மொத்த உற்பத்தியில் 90 சதவிகிதம் ரயில்வே துறைக்கு என்றும், மீதமுள்ள 10 சதவிகிதம் பீகாரிற்கும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.