கடந்த அக்டோபர் 26, 2019, சனிக்கிழமை அன்று, மத்திய ரயில்வே பிரிவு அதிகாரிகள் ஆபரேஷன் தனுஷ் என்கிற பெயரில், ரயில்வே இ டிக்கெட் மோசடி செய்பவர்களை கண்டு பிடிக்க களம் இறங்கினார்கள்.
இந்த இ டிக்கெட் மோசடி எப்படி இயங்குகிறது. இந்த மோசடி கும்பல் ஏதோ சில மென்பொருளைப் பயன்படுத்தி தேவையான ரயிலில், தேவையான எண்ணிக்கையில் இருக்கைகள் அல்லது பெர்த்களை பிடித்து விடுகிறார்கள். அதன் பின் யாருக்கு டிக்கெட் தேவையோ அவர்களுக்கு கூடுதல் விலை வைத்து டிக்கெட்டை விற்றுவிடுகிறார்கள். சுருக்கமாக முன்பு எல்லாம் சினிமா தியேட்டர்களில் ப்ளாக் டிக்கெட் விற்பார்களே, அதே தான் இப்போது ரயிலில் சீட்டு பிடிப்பது வரை வந்திருக்கிறது.
ரயில்வே இ டிக்கெட் வழியாக மோசடி செய்யும் 23 ஏஜெண்ட்கள் சிக்கினார்களாம். இவர்களிடம் இருந்து, சுமார் 9.43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 287 லைவ் டிக்கெட்டுகள் வாங்கினார்களாம். அதோடு சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1008 மோசடி டிக்கெட்டுகள் வழியாக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
அதன் பின் லைவ் டிக்கெட்டுகள் அனைத்தும் ரயில்வே நிர்வாகத்தால் பிளாக் செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு மேற்கொண்டு இது போன்ற டிக்கெட் மோசடி செய்பவர்களிடம் இருந்து டிக்கெட்டை வாங்க வேண்டாம் எனவும் ரயில்வே நிர்வாகம் தன்னுடைய செய்திக் குறிப்பில் மக்களை அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
மேற்கொண்டு, இந்த டிக்கெட் மோசடி செய்பவர்கள் வழியாக, ரயில்வே டிக்கெட்களைப் பெற்றது கண்டு பிடிக்கப்பட்டால், பதிவு செய்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும். அதோடு பணமும் திரும்ப கிடைக்காது எனச் சொல்லி இருக்கிறார்கள் ரயில்வே தரப்பினர்கள்.
மத்திய ரயில்வே பிரிவு போல, மேற்கு ரயில்வே பிரிவினரும் டிக்கெட் மோசடியைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். மேற்கு ரயில்வே பிரிவினர் நடத்திய சோதனையில், ரயில் எண் 22956 - BHUJ - BDTS Kutch express ரயிலில், நவம்பர் 01 முதல் நவம்பர் 13-ம் தேதி வரை பல நாட்களில் இ டிக்கெட்டில் மோசடி செய்து இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். அதோடு சந்தேகத்துக்குரிய 282 பி என் ஆர் எண்களைக் கொண்ட 1,692 பயணிகளுக்கான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறதாம். இது போல மக்கள் ஏமாறாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரித்து இருக்கிறது ரயில்வேஸ். தினுசு தினுசா தொழில் கண்டு பிடிக்கிறாய்ங்களே..!