கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பிக் கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு துறையும் இயல்பு நிலை திரும்பிக் கொண்டுள்ளன.
குறிப்பாக போக்குவரத்து துறையானது பெரும் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. கொரோனா காலத்தில் முழுவதும் முடங்கியிருந்த போக்குவரத்து துறையானது நல்ல வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளன.
அதன் பிரதிபலிப்பாக இந்திய ரயில்வே ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8 வரையிலான காலக்கட்டத்தில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. இதன் காரணமாக இந்த காலகட்டத்தில், கடந்த ஆண்டினை காட்டிலும் வளர்ச்சி இருமடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளின் வரத்து
குறிப்பாக பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில் வளர்ச்சி விகிதமானது 197% வளர்ச்சி கண்டுள்ளது. இதே பதிவு செய்து பயணிக்கும் பயணிகளின் வளர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 24% அதிகரித்துள்ளது.
வருவாய் எதிர்பார்ப்பு
இது குறித்து ரயில்வே அமைச்சகத்தின் தரவின் படி, ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8 வரையிலான சுமாரான வருவாய் 33,476 கோடி ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 92% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 17,394 கோடி ரூபாயாக இருந்தது.
பதிவு செய்த பயணிகள் பிரிவில் வளர்ச்சி
பதிவு செய்யப்பட்ட பயணிகள் துறையில், மொத்த பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் - அக்டோபர் 8 வரையிலான காலகட்டத்தில் 42.89 கோடியாகும். இது கடந்த ஆண்டில் 34.56 கோடியாகும். இது 24% வளர்ச்சியினை கண்டுள்ளது. இந்த பிரிவில் வருவாய் விகிதம் 26,961 கோடி ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 65% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் 16,307 கோடி ரூபாயாக இருந்தது.
பதிவு செய்யாத பயணிகள் பிரிவில் வளர்ச்சி
பதிவு செய்யாத பயணிகள் பிரிவில் ஏப்ரல் - அக்டோபர் 8 காலகட்டத்தில், பயணிகளின் எண்ணிக்கை 268.56 கோடி பயணித்துள்ளனர். இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 197% அதிகமாகும். இது கடந்த ஆண்டில் 90.57 கோடி ஆக இருந்தது.
இந்த துறையில் வருவாய் விகிதம் 6151 கோடி ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 500% அதிகமாகும். இது கடந்த ஆண்டில் 1086 கோடி ரூபாயாகும்.