இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் நிலையில் இத்திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய நிதி திரட்டும் திட்டத்தை வகுத்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் நிதியைத் திரட்ட உள்ளது.
இதன் படி இந்திய ரயில்வே துறை மத்திய asset monetisation திட்டத்திற்காகச் சுமார் 87 நிலங்களையும், 84 ரயில்வே காலனிகளையும், 4 மலை ரயில் சேவைகளையும், 3 ஸ்டேடியங்களையும் விற்பனை செய்ய ஏற்றது எனக் கண்டறிந்துள்ளது.
ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்
இதுக்குறித்து நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயல் நிலம், ரயில்வே காலனிகள், மலை ரயில் சேவை ஆகியவற்றை விற்பனை செய்து நிதி திரட்டிய பின்பு சரக்கு போக்குவரத்தையும் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனியார்மயமாக்குதல் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், அரசு சொத்துக்களை விற்பனை செய்ய ஏதுவான சூழ்நிலை உருவாக்க 'National Monetization Pipeline' அமைக்க உள்ளதாக அறிவித்தார்.
அரசு சொத்துக்கள் விற்பனை
நிதியமைச்சர் அறிவித்துள்ள இந்த 'National Monetization Pipeline' திட்டத்தின் மூலம் நாட்டின் பிரவுன்பீல்டு பிரிவில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ய முடியும். இதன் வாயிலாகவே இந்திய ரயில்வே துறை தற்போது தேர்வு செய்துள்ள சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளது.
இந்திய ரயில்வே துறை
மார்ச் 31, 2020 தகவல்படி இந்திய ரயில்வே துறை சுமார் 4.81 லட்சம் ஹெக்டர் நிலம் வைத்துள்ளது. இதில் 3.67 லட்சம் ஹெக்டர் நிலம் ரயில் வழித்தடம், ரயில் நிலையம், ரயில்வே காலனிகள் உள்ளது. சுமார் 0.51 ஹெக்டர் நிலம் காலி நிலமாக உள்ளது.