அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக வல்லரசு நாடாகும் இந்தியாவின் மிகப்பெரிய கனவுத் திட்டத்தை அடைய தற்போது இந்தியா எடுத்துள்ள முக்கியமான திட்டம் உற்பத்தியும், ஏற்றுமதியும்.
சீனாவுக்கு இணையாக அனைத்து துறையிலும் உற்பத்தி தளத்தை அமைத்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக மாற வேண்டும் என்றால் போக்குவரத்து அதிலும் குறிப்பாகச் சரக்குப் போக்குவரத்தைப் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும்.
ஆனால் இந்திய ரயில்வே துறை இப்பிரிவில் பெரிய அளவிலான சரிவைக் கண்டு வருகிறது. இதை மீட்டு எடுக்க இந்திய ரயில்வே துறை முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இந்திய ரயில்வே
1950-51 ஆம் ஆண்டில், இந்திய ரயில்வே நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் துறையின் மோனோபோலியாக இருந்தது என்றால் மிகையில்லை. போதுமான சாலை வசதிகளும், வாகனங்களும் இல்லாத காரணத்தால் சரக்கு ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியமானதாக இருந்தது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான பலன் அளித்தது.
சரக்கு போக்குவரத்து
1950-51 ஆம் ஆண்டில் இந்திய சரக்குப் போக்குவரத்தில் இந்திய ரயில்வே சுமார் 85 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. அதன் பிறகு 1991 இல் அதன் பங்கு 60% ஆகவும் குறைந்தது. இதைத் தொடர்ந்து சாலை போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி சரக்கு வணிகங்களில் இந்திய ரயில்வே தனது ஆதிக்கத்தை இழந்ததால் இப்போது 27% ஆகவும் சரிந்தது.
22 சதவீதம் வரை சரியும்
சரக்குப் போக்குவரத்துத் துறை வழக்கமான தனது வர்த்தகப் பாதையைத் தொடர்ந்தால் இந்திய ரயில்வே 2030 ஆம் நிதியாண்டில் வெறும் 22 சதவீத பங்கை மட்டுமே கொண்டு இருக்கும். இந்திய ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்துத் துறையின் வருடாந்திர வளர்ச்சி வெறும் 4 சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்தத் தரவுகளை 10 ரயில்வே வாரிய அதிகாரிகள் எழுதிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Mission 3000 MT திட்டம்
இந்த நிலையில் இந்திய ரயில்வே துறையின் சரிவைச் சமாளிக்க Mission 3000 MT என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது, இத்திட்டத்தின் மூலம் 2027ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே துறையின் சரக்கு போக்குவரத்து அளவை 3000 மில்லியன் டன்களாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது. 2022 ஆம் நிதியாண்டில் இதன் அளவு 1,418 மில்லியன் டன் ஆக இருந்தது.
சரக்கு போக்குவரத்து நெட்வொர்க்
இந்திய ரயில்வே துறையின் 3000 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து இலக்கை அடைய சரக்கு போக்குவரத்து நெட்வொர்க்-ஐ விரிவாக்கம் செய்யவேண்டிய கட்டாயம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 2026-27 வரையிலான காலகட்டத்தில் சரக்கு போக்குவரத்துச் செலவுகள் 30 சதவீதம் வரையில் குறைக்க முடியும்.
மொத்த சரக்கு போக்குவரத்து
இதேபோல் நாட்டின் மொத்த சரக்கு போக்குவரத்துத் துறையில் சுமார் 45 சதவீத சந்தையைக் கைப்பற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை ரயில்வே உயர்மட்ட நிர்வாகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதற்கான பணிகள் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
50 சதவீத பங்கு
இந்தப் பணிகள் திட்டமிட்டபடி நடந்தால் 2030க்குள் 50 சதவீத சரக்குப் போக்குவரத்தை இந்திய ரயில்வே துறை கைப்பற்றும்.இந்திய ரயில்வே துறையின் ப்ளூப்ரிண்ட் படி 2030க்குள் நாட்டின் சரக்குப் போக்குவரத்தில் 50 சதவீதம் ரயில், 50 சதவீதம் சாலை போக்குவரத்தாக இருக்கும்.
போக்குவரத்துச் செலவுகள்
இதன் மூலம் நாட்டின் போக்குவரத்துச் செலவுகள் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி அளவில் தற்போது இருக்கும் 14 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாகக் குறைக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
500 லட்சம் கோடி ரூபாய் சேமிப்பு
2030க்குள் இந்திய பொருளாதாரம் 500 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயரும் என்றால் இந்த 3 சதவீத சேமிப்பு என்பது வருடத்திற்கு 15 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க முடியும். இதேவேளையில் 5 சதவீதத்திற்குக் கீழ் விமான மற்றும் கடல்வழி போக்குவரத்தும் பங்கு வகிக்கும்.
8 திசை
இந்திய ரயில் போக்குவரத்து நாட்டின் 8 திசையிலும் இருக்கும் காரணத்தில் சில குறிப்பிட்ட வர்த்தக மாற்றம், மறுசீரமைப்பு ஆகியவற்றைச் செய்தால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உற்பத்தித் துறையை மேம்படுத்தப்பட்டு ரயில்வே சரக்கு போக்குவரத்து மூலம் இந்தியா முழுவதும் டெலிவரி செய்ய முடியும்.
இது சாத்தியமா..?
இதைச் சாத்தியப்படுத்துவதில் பல பிரச்சனைகள் இருந்தாலும் national logistics policy (NLP) மூலம் இதை விரைவாகச் சாத்தியப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது. இதேவேளையில் அடுத்த 5 வருடத்தில் 1.55 லட்சம் சரக்கு போக்குவரத்துக்கான பெட்டிகள் 7000 எலக்ட்ரிக் லோகோ ஆகியவற்றைக் கொண்டு வருவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்த முடியும். இதற்காக அடுத்த 5 வருடத்தில் மத்திய அரசு ரயில்வே துறையில் 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.