கொரோனா தொற்று பல கோடி மக்களின் வெளிநாட்டுப் பயணங்களை முடக்கியிருந்தாலும், பணக்காரர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். குறிப்பாக விடுமுறைக்காகவும், ஷாப்பிங், வர்த்தகம் ஆகிய காரணங்களுக்கான வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதேவேளையில் இந்தியக் குடியுரிமையை விடுத்து வெளிநாடுகளில் குடியுரிமை பெறுவதற்காக முதலீடு மூலம் குடியுரிமை பெறும் முயற்சிகளை அதிகளவிலான இந்தியர்கள் எடுத்துள்ளனர்.
வெளிநாட்டில் குடியுரிமை
பெரும்பாலான நாடுகளில் முதலீடு மூலம் குடியுரிமை பெறும் வாய்ப்பு உள்ளது, குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முன்னணி பொருளாதார நாடுகளில் குடியுரிமை பெறுவதற்காக இத்தகைய வாய்ப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
இந்தியர்கள் முதல் இடம்
இந்த வகையில் வெளிநாட்டில் குடியுரிமை பெற விண்ணப்பம் செய்தோரின் எண்ணிக்கையில் இந்தியர்கள் இந்த வருடமும் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். இதிலும் 2019ஆம் ஆண்டை விடவும் 2020ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை அதிகம் என இத்தகைய குடியுரிமையை அளிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இரட்டை குடியுரிமை
பிற நாடுகளைப் போல இந்தியாவில் இரட்டை குடியுரிமை சட்டம் இல்லை என்பதால், வெளிநாட்டில் குடியுரிமை பெற்றால் இந்திய பாஸ்போர்ட்-ஐ கைவிட வேண்டும். ஆயினும் உலக நாடுகளை விடவும் இந்தியாவில் இருந்து அதிகளவிலான மக்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற ஆர்வம் காட்டியுள்ளனர்.
7000 இந்தியர்கள் வெளியேற்றம்
2019ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து வெளியேறிய பணக்காரர்கள் (HNWI) எண்ணிக்கை 7000 பேர், இது கிட்டத்தட்ட இந்தியாவின் தனிநபர் பணக்காரர்கள் மக்கள் தொகையில் 2 சதவீதமாகும். மேலும் 2019ஆம் ஆண்டு வெளிநாட்டுக் குடியுரிமைக்காகப் பெறபட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையை விடவும் 2020ல் சுமார் 62.6 சதவீத அதிக விண்ணப்பங்களை இந்தியர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
முக்கிய நாடுகள்
பொதுவாக இந்தியர்கள் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குடியுரிமை பெற விரும்பும் நிலையில், இந்த வருடம் போர்ச்சிகல், ஆஸ்திரியா, மால்டா, துருக்கி ஆகிய நாடுகளில் குடியுரிமை பெற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா 2வது இடம்
வெளிநாட்டில் குடியுரிமை பெற வேண்டும் என அதிகளவில் விண்ணப்பம் அளித்துள்ள நாடுகளில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், 2019ல் 6வது இடத்தில் இருந்த அமெரிக்கா, 2020 கொரோனா தொற்று மற்றும் அரசியல் பிரச்சனைகள் மத்தியில் இந்த வருடம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
பாகிஸ்தான் 3வது இடம்
இந்தியா, அமெரிக்காவை அடுத்த 3வது இடத்தில் பாகிஸ்தான், 4வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா, 5வது இடத்தில் நைஜீரியா ஆகிய நாடுகள் உள்ளது. இந்தத் தரவுகள் அனைத்தும் குடியுரிமை சேவைகளை உலகளவில் அளித்து வரும் Henley & Partners வெளியிட்டுள்ளது.