மும்பை: இந்தியாவுக்கு கடந்த சில மாதங்களாகவே போதாத காலம் போலிருக்கிறது. ஏனெனில் மத்தளம் போல் எந்த பக்கம் திரும்பினாலும் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது.
Recommended Video
ஒரு புறம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம், முடங்கிய போயுள்ள தொழில் துறை, இதன் எதிரொலியாக ரூபாய் வீழ்ச்சி என தொடர்ந்து இந்தியா வீழ்ச்சியின் பிடியிலேயே சிக்கியுள்ளது.
ஏதோ இப்போதுதான் கொஞ்சம் இந்திய பொருளாதாரம் துளிர் விடத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.
ஒரு புறம் இந்த கொடிய வைரஸின் கொடூர தாண்டவத்தால் உலகப் பொருளாதாரமே ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்திய பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சி காணக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆட்டம் கண்டுள்ள இந்திய பொருளாதாரத்தில் இது இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ என்ற பதற்றத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் கடந்த ஆறு சந்தை தினங்களில் மட்டும் 10 லட்சம் கோடி ரூபாயை சந்தை விழுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆக அதற்கேற்றவாறு கொரோனாவினால் நாளுக்கு நாள் உயிர்பலியும் அதிகரித்து வருகிறது. இது ஒரு புறம் எனில் சீனாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் அங்கு ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகமும் சுத்தமாக முடங்கியுள்ளது. அதே நேரம் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியும் தடைபட்டுள்ளது. இதனால் பல முக்கிய துறைகளுக்கு மூலதன தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக இந்த கொரோனாவால் பெருத்த அடி இந்தியாவுக்கே. இதன் காரணமாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் இன்று காலையில் வர்த்தக தொடக்கத்திலேயே வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் தற்போது ரூபாயின் மதிப்பு 0.49% வீழ்ச்சி கண்டு 71.96 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் கொரோனாவின் எதிரொலியால் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. மேலும் புதிய அன்னிய நேரடி முதலீடுகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. இதுவும் இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1174 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 38,570 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 252 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,282 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.