சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் பல ஆண்டுகளாக அதிகப்படியான தளர்வுகள் உடன் பொருளாதார வளர்ச்சியைக் கட்டமைத்து வரும் அமெரிக்கா, பணவீக்கம் அதிகரித்து உள்ளதால் தனது நாணய கொள்கையின் தளர்வுகளைக் குறைத்து வருகிறது.
இதன் வாயிலாகச் சர்வதேச சந்தையில் இருக்கும் முதலீடுகள் அமெரிக்கக் கடன் மற்றும் பத்திர சந்தைக்கு மாறி வருகிறது, இதற்கிடையில் வரலாற்று உச்ச அளவை தொட்ட கச்சா எண்ணெய், ரஷ்ய உக்ரைன் போரால் ஏற்பட்ட சப்ளை செயின் பாதிப்பு ஆகியவை டாலரின் ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக இந்திய ரூபாய் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு எதிராக 80 ஐ கடந்துள்ளது. இதேவேளையில் மோடியின் ஆட்சியில் மட்டும் ரூபாய் மதிப்பு சுமார் 25 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என ஆர்பிஐ தரவுகள் கூறுகிறது.
25 சதவீதம் சரிவு
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் நிலையை இன்றைய நிலையோடு ஒப்பிடும் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
இந்தப் பெரும் சரிவுக்குக் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற உலகளாவிய பிரச்சனைகள் தான் ரூபாய் மதிப்பின் சமீபத்திய வீழ்ச்சிக்குக் காரணம் எனவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுத்துள்ளார்.
மக்களவையில் கேள்வி
டிசம்பர் 31, 2014 அன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.33 ஆக இருந்தது. இது ஜூலை 11, 2022 அன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.41 ஆகச் சரிந்தது என மக்களவையில் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
80.064 ஆகச் சரிவு
திங்களன்று அதாவது ஜூலை 18ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 80.064 ஆகக் குறைந்த இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் 79.94 ஆக உள்ளது.
காரணம்
மக்களவையில் எழுந்த கேள்விக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், "ரஷ்யா-உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக நிதி நிலைமைகள் இறுக்கம் போன்ற உலகளாவிய காரணிகள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள் என விளக்கம் கொடுத்துள்ளார்.
பிற நாணயங்கள்
பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பான் யென் மற்றும் யூரோ போன்ற நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிராகப் பதிவு செய்த சரிவைக் காட்டிலும் இந்திய ரூபாயை குறைவான அளவிலேயே விடப் பலவீனமடைந்துள்ளன. இதன் மூலம் 2022 ஆம் ஆண்டில் இந்த நாணயங்களுக்கு எதிராக இந்திய ரூபாய் வலுவடைந்துள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.


Click it and Unblock the Notifications