சர்வதேச முதலீட்டுச் சந்தையில் உருவாகியுள்ள மந்த நிலையால் இந்திய சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பு குறைவது மட்டும் அல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதன் மூலம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கச்சா எண்ணெய் முதல் உணவு பொருட்கள், ஸ்மார்ட்போன், உதிரிப்பாகங்கள் வரையில் அனைத்தும் அதிகரித்து வருகிறது.
டாலர் - ரூபாய்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.73 என்ற புதிய வரலாற்றுச் சரிவை பதிவு செய்தது. கடந்த பத்து வர்த்தக நாளில் அமெரிக்க டாலரின் அதிகப்படியான ஆதிக்கத்தால் ரூபாய் மதிப்பு ஐந்து முறை புதிய வரலாற்றுச் சரிவைப் பதிவு செய்து ரூபாய் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
டாலர் ஆதிக்கம்
பணவீக்கத்தால் பங்குச்சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வரும் இதேவேளையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் காரணத்தால் வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் பத்திர சந்தையில் குவிந்து வருகிறது.
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு
இதனால் டாலர் மதிப்பு மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியா ரூபாயின் மதிப்பு மட்டும் அல்லாமல் ஜப்பான் யென், சீனா யுவான், கொரியா வான் உட்பட அனைத்தும் சரிந்துள்ளது. குறிப்பாகப் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத விதமாக 201.21 ரூபாயாக உள்ளது.
அந்நியச் செலாவணி
இந்நிலையில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு எதிராக ரூபாய் 77.72 ஆகக் குறைந்து, இன்ட்ரா-டே வர்த்தகத்தில் குறைந்தபட்சம் 77.76 மற்றும் அதிகபட்சம் 77.63 வரை இருந்தது.
ரிசர்வ் வங்கி
புதன்கிழமை பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக ரூபாயின் மதிப்பு 77.61 ஆக குறைந்திருந்தது, ஆனால் இன்று 77.76 ரூபாய் வரையில் சரிந்து மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதே வேளையில், இந்திய ரிசர்வ் வங்கி வட்டி உயர்த்தி, டாலர் இருப்பைச் சரி செய்யாமல் இருந்திருந்தால் ரூபாய் மதிப்பு இன்னும் அதிகமான இழப்புகளை எதிர்கொண்டு இருக்கும்.