டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று காலையில் வர்த்தக தொடக்கத்திலேயே 29 பைசா குறைந்து, 73.63 ரூபாயாக தொடங்கியது. இது அமெரிக்கா டாலரின் வலிமை மற்றும் சர்வதேச முதலீடுகளின் எதிரொலியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதோடு உள்நாட்டு சந்தையிலும் முதலீட்டாளர்கள் தொழில்துறை உற்பத்தி குறித்தான குறியீடு குறித்து கண்கானித்து வருகின்றனர். இது பலவீனமான பொருளாதாரத்தினை எடைபோட தரவாக அமையும் என்பதால், ரூபாயின் மதிப்பானது சற்று சரிவில் காணப்படுகிறது.
அதோடு உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி, அன்னிய முதலீட்டாளர்களும் சரி, இந்தியா சீனா இடையேயான எல்லை பதற்றத்தினை தொடர்ந்து கண்கானித்து வருகின்றனர். ஆக இதன் எந்தவொரு விரிவாக்கமோ அல்லது பிரச்சனையோ ரூபாயின் மதிப்பிலும் சந்தையிலும் பிரதிபலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் பெரியதொரு மாற்றமில்லாமல் காணப்படுகிறது.
இதற்கிடையில் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 73.20 ரூபாய் முதல் 73.82 ரூபாய் வரையில் இருக்கலாம் என்று கணித்துள்ளது.
இதே ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோயின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் மீட்பு என்பது மென்மையடையலாம். இதன் பொருளாதார வளர்ச்சி இனி வரும் காலாண்டுகளிலும் சரிவில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 72.5 ரூபாய் வரையில் வீழ்ச்சி காணலாம் என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி விகிதமானது அமெரிக்காவின் ஜிடிபி விகிதத்தினை விட மோசமாக தான் உள்ளது என்று தற்போது அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. அதோடு அமெரிக்காவில் பொருளாதாரத்தினை தூண்டும் விதமாக, மீண்டும் ஒரு பெரிய தூண்டுதல் தொகுப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு சரிந்து காணப்பட்டாலும், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 268 புள்ளிகள் அதிகரித்து, 38,685 ஆக காணப்படுகிறது, இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 11,422 ரூபாயாகவும் காணப்படுகிறது. இந்த நிலையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 73.49 ரூபாயாக தற்போது காணப்படுகிறது.