இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பானது 12 பைசா அதிகரித்து 73.37 ருபாயாக தொடங்கியது. எனினும் தற்போது 73.51 ரூபாயாக வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்கா டாலர் வீழ்ச்சிக்கு மத்தியில் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. இதற்கிடையில் தான் இந்திய ரூபாயும் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தினை கண்டது.
அதோடு வர்த்தகர்களும் நேற்று வெளியான பணவீக்க விகிதம் தொடர்பான குறீயீட்டில் கவனமாக இருந்தனர். ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் தொடர்பான குறியீடு 6.69 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 6.73 சதவீதமாக இருந்தது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கிற்கு அப்பால் உள்ளது. இதன் காரணமாக வரவிருக்கும் ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
இதே போல இன்று நடக்கவிருக்கும் அமெரிக்கா பெடரல் வங்கிக் கூட்டத்தில் டாலரின் மதிப்பினை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கைகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று ரூபாயின் மதிப்பானது 73.20 ரூபாய் முதல் 73.80 ரூபாய் வரையில் இருக்கலாம் என்றும் மோதிலால் ஆஸ்வால் கணித்துள்ளது.
இதோடு இந்தியா சீனா இடையேயான பதற்ற நிலையிலும் ரூபாயின் மதிப்பில் எதிரொலிக்கிறது. ஏனெனில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பதற்றமான சூழ்நிலையே இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வருகின்றது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் வரத்தும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இந்தியாவினை பொறுத்த வரையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இதன் காரணமாகவும் ரூபாயின் மதிப்பானது மீண்டும் அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறது.
எனினும் இந்த வருட இறுதிக்குள் கொரோனா தடுப்பூசிகள் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூபாயின் மதிப்பு அதிகளவில் வீழ்ச்சியடையாமல் தடுக்கும். அதோடு தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 0.11 டாலர்கள் குறைந்து, 39.48 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.
இதற்கிடையில் இந்திய பங்கு சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 196 புள்ளிகள் அதிகரித்து, 38,953 ஆக வர்த்தகமாகி வருகின்றது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 57 புள்ளிகள் அதிகரித்து 11,497 ஆக வர்த்தகமாகி வருகின்றது. இதற்கிடையில் தற்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 73.55 ரூபாயாகவும் காணப்படுகிறது.