அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், இன்று முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 1 வருட உச்சத்தில் உள்ளது.
இன்று காலையிலேயே சற்று ஏற்றத்தில் தொடங்கிய இந்திய ரூபாயின் மதிப்பானது, முடிவிலும் 7 பைசா அதிகரித்து 72.68 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.
இது இந்திய சந்தைகள் தொடர்ந்து வரலாற்று உச்சத்தினை எட்டி வரும் நிலையில், அன்னிய முதலீடுகளின் வரத்து சந்தைக்கு சாதகமாக உள்ளது. மேலும் இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக உள்நாட்டு பொருளாதாரம் சார்ந்த குறியீடுகள் பலவும் சந்தைக்கு சாதகமாக வந்துள்ளன. இதனால் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து காணப்படுகிறது.
மேலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக, பட்ஜெட் 2021 அறிவிப்புகள், குறைந்து வரும் கொரோனா தாக்கம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் என அனைத்தும் சந்தைக்கு சாதகமாகவே வந்து கொண்டுள்ளன.
கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டுள்ள அதே நேரத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ளன. இது அமலுக்கு வரும் பட்சத்தில், இது விரைவில் பொருளாதார வளர்ச்சிக்கு காணும். இது சந்தைக்கு சாதகமாக அமையும் என்றும் பார்க்கப்படுகிறது. இதனால் அன்னிய முதலீட்டாளர்களும் தொடர்ந்து தங்களது முதலீடுகளை இந்திய சந்தைகளில் செய்து வருகின்றனர்.
மேலும் நிறுவனங்களும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கூட, நல்ல லாபம் கண்டு வருகின்றன. மேலும் வலுவான வளர்ச்சியினை காட்டி வருகின்றன.
இதற்கிடையில் ஆறு நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு 0.15% குறைந்து, 90.34 டாலராக காணப்படுகிறது.
சமீப காலங்களாகவே 73 - 74.50 ரூபாய் என்ற விகிதத்திலேயே இருந்து வந்தது. இதற்கிடையில் தற்போது 72 - 73 ரூபாய் என்ற விகிதத்திற்கு மாறியுள்ளது. இது சந்தைக்கு சாதகமான விஷயமே
இதற்கிடையில் இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 609.83 புள்ளிகள் அதிகரித்து 52,154.13 புள்ளிகளாக வர்த்தகமாகியும், இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 151.40 புள்ளிகள் அதிகரித்து, 15,314.70 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.