மும்பை: உலகளவில் மக்களை பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸானது, இந்தியாவில் நாளுக்கு நாள் அதன் உக்கிரத்தினை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகள் கடந்த திங்கட்கிழமையன்று படுவீழ்ச்சி கண்டன. சொல்லப்போனால் வரலாறு காணாத அளவு ஒரே நாளில் கிட்டத்தட்ட 4,000 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
அதிலும் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சந்தை 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத உச்சமான 76.32 ரூபாயினை தொட்டது.
தொடரும் வீழ்ச்சி
இப்படி ஒரு நிலையில் இன்று ரூபாயின் மதிப்பானது 76.14 ரூபாயாக சற்று அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. எனினும் 76 ரூபாய்க்கு மேல் தான் வீழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகம் முழுக்க நாளுக்கு நாள் கொரோவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது.
வட்டி குறைப்பு நடவடிக்கை
தொடர்ந்து கிடு கிடுவென வீழ்ச்சி கண்டு வந்த ரூபாயின் மதிப்பானது, இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது எப்படி? ஒவ்வொரு நாடுகளும் கொரோனாவின் தாக்கத்திலிருந்து மக்களையும், பொருளாதாரத்தையும் காக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனையடுத்து பொருளாதாரத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மத்திய வங்கிகள் நிதியினை ஊக்கப்படுத்தி வருகின்றன. சில வங்கிகள் வட்டி குறைப்பும் செய்து வருகின்றன.
ஆர்பிஐயின் அதிரடி அறிவிப்பு
இதனையடுத்து இந்தியா ரிசர்வ் வங்கியும் தனது பங்கிற்கு பணப்புழக்கத்தினை ஊக்கப்படுத்த 1 லட்சம் கோடி ரூபாயினை கொடுக்க உள்ளதாக வெளியிட்டது. இதனால் முதலீட்டாளர்களின் உணர்வு சற்றே மேம்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதனால் அதிகப்படியான இறக்கம் தடுக்கப்பட்டது. எப்படி எனினும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் கொரோனாவினால் இன்னும் கூட வீழ்ச்சி தொடரலாம் என்ற கவலையும் அதிகரித்து வருகிறது.
இன்னும் வீழ்ச்சி காணலாம்
இதற்கிடையில் இந்தியாவில் இதுவரை 500 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இதுவரை இந்திய சந்தைகளில் இருந்து அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதனால் சந்தை அதிகரித்து வருகிறது. இதனால் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரியும் அபாயத்தில் தான் உள்ளது.