ஜூன் மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை வரலாறு காணாத உயர்வை எட்டிய பின்னர், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பற்றிய கவலைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதன் வாயிலாகச் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வர்த்தகத்தில் முதலீட்டுச் சந்தையில் கூடுதலான முதலீடுகள் வெளியேறிய நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 79.32 ரூபாய் வரையில் சரிந்து வரலாற்றுச் சரிவை பதிவு செய்தது.
இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் 79.04 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகப் பற்றாக்குறை
ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதியின் அதிகரிப்புக்கு மத்தியில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஜூன் மாதம் 25.63 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 9.61 பில்லியன் டாலராக இருந்தது. இந்தத் தடாலடி உயர்வுக்கு ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும் முக்கியக் காரணம்.
ஏற்றுமதி, இறக்குமதி
ஜூன் மாதம் ஆடை ஏற்றுமதி 20.55 சதவீதம் அதிகரித்து 38.94 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதேவேளையில்
தங்கம் இறக்குமதி ஜூன் மாதம் தங்கம் இறக்குமதி 3 மடங்கு உயர்ந்துள்ளது. 2021 ஜூன் மாதம் 17 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2022 ஜூன் மாதம் 49 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
பொருளாதார மந்த நிலை
இந்தியாவின் ஏற்றுமதி ஒருபக்கம் பெரிய அளவில் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் இறக்குமதி அளவும் அதிகரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சர்வதேச பொருளாதார மந்த நிலை, மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வு ஆகியவை இந்திய சந்தையில் இருந்து அதிகப்படியான அன்னிய முதலீட்டை வெளியேற்றியுள்ளது.
நோமுரா
இந்நிலையில் நோமுரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் மாதம் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ள வேலையிலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையிலும் இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை 2023ஆம் நிதியாண்டில் 3.3 சதவீதமாக அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. 2022ஆம் நிதியாண்டில் இதன் அளவு 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications