இந்திய பொருளாதார வளர்ச்சியில் உள்ள தொடர் வீழ்ச்சி மற்றும் பணவீக்கத்தின் எழுச்சியால் இந்தியா ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது.
அது எந்த அளவுக்கு எனில் ஆசிய நாணயங்களிலேயே மோசமான வீழ்ச்சி என்று கூறப்படுகிறது.
இந்திய ரூபாய், தென்கொரியா மற்றும் பாகிஸ்தான் நாணயங்களை தவிர்த்து மற்ற ஆசிய நாணயங்களை விட படு வீழ்ச்சி கண்டுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரூபாய் வீழ்ச்சி
கடந்த 2019ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பானது, அமெரிக்கா டாலருக்கு எதிராக கிட்டதட்ட 2% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே தாய்லாந்து நாட்டு கரன்சியான தாய் பாத் 6.3% எழுச்சி கண்டுள்ளது. இதே மலேசியாவின் கரன்சியான ரிங்கிட் 1.5% ஏற்றமும், பிலிப்பைன்ஸ் கரன்சியான பெசோ 3% எழுச்சியும் கண்ட இந்த காலத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 2% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோசமான வீழ்ச்சி
இதே உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான சீனாவின் ரென்மின்பி 0.4% டாலருக்கு எதிராக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்திய ரூபாயின் மதிப்புடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் படு மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்த்ததை விட ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சியே இதற்கு காரணம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
நாணய மதிப்புக்கும், பொருளாதாரத்திற்கும் தொடர்பு
ஒரு நாட்டின் நாணய மதிப்பிற்கும், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. இந்தியா தனது சகாக்களூடன் ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் படு வீழ்ச்சி கண்டுள்ளது. சொல்லப்போனால் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில் வீழ்ச்சி கண்டது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு இப்படி கீழ் நோக்கிய அழுத்தத்திற்கு தள்ளப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
முதலீடு இருந்த போதிலும் வீழ்ச்சி
கடந்த 2019 காலாண்டர் ஆண்டில் 20 பில்லியன் மதிப்புள்ள அன்னிய முதலீடுகள் (பங்கு மற்றும் கடன் சந்தை) இருந்த போதிலும் கூட இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டது. இதற்கு உதாரணமாக 2008ல் லெஹ்மன் நெருக்கடி காரணமாக இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் கூர்மையான வீழ்ச்சிக்கு வழி வகுத்ததால், அந்த சமயத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 20% வீழ்ச்சி கண்டது.
இந்தியாவை விட பாகிஸ்தான் படு வீழ்ச்சி
கடந்த ஆண்டில் உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு மேற்கொண்ட கர்ப்பரேட் வரி குறைப்புக்கு பின்னர், இந்தியாவுக்கு மூலதன வருவாய் மேம்பட்டது. இது பங்கு விலைகளிலும் ஒரளவுக்கு எதிரொலித்தது. எனினும் ரூபாய் வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. இதுவே பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு இந்தியா ரூபாயை விட மிக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் மட்டும் 9.5% வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது ஒரு டாலருக்கு 154.4 ரூபாயாகவும், இது ஒரு வருடத்திற்கு முன்பு 139.8 ரூபாயாகவும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்திய பொருளாதார வளர்ச்சி
2019 - 20ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 5% ஆக வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கும் முன்பு 6.8% ஆக இருந்தது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, எந்தவொரு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியின் கூர்மையான சரிவுகளில் இதுவும் ஒன்று என்று இந்தியாவை குறிப்பிட்டிருந்தது கவனிக்கதக்கது.