மும்பை: இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே. சீனா மட்டும் அல்லாது மற்ற நாடுகளையும் இது ஆட்டிப்படைத்து வருகிறது.
ஏற்கனவே ஆசிய நாணயங்களிலேயே மிக மோசமான நாணயமாக கருதப்பட்டு வந்த ரூபாய், தற்போது சீனாவினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா பயத்தால், இந்திய ரூபாய் மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஏனெனில் கொரோனா பயத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பயம் நிலவி வருகிறது. இது முதலீடுகள் செய்வதையும் தடுப்பதோடு, செய்த முதலீடுகளையும் கூட வெளியே எடுக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.
குறைந்து வரும் முதலீடுகள்
இந்த பலவீனமான உணர்வால் இந்திய சந்தையில் முதலீடுகள் குறைந்து வருகிறது. மேலும் இது அன்னிய முதலீடுகளுக்கும் வீழ்ச்சி காண வழிவகுத்துள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா குறைந்து 71.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
பங்கு சந்தையிலும் அழுத்தம்
மேலும் இந்திய முதலீட்டாளர்கள் தவிர வெளிநாட்டு முதலீடுகளும் வெளியேறி வருகின்றன. உலகளாவிய அளவில் டாலரின் மதிப்பு வலுவாக இருப்பதால், உள்நாட்டு நாணய மதிப்பும் வலுவிழந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. மேலும் உள்நாட்டு பங்கு சந்தையிலும் இந்த அழுத்தம் காணப்படுகிறது. இதனால் பங்கு சந்தைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
தொடரும் ரூபாய் வீழ்ச்சி
கடந்த திங்கட்கிழமையன்று முடிந்த ரூபாயின் மதிப்புடன் ஒப்பிடும்போது இன்றைய வர்த்தக தொடக்கத்திலேயே ரூபாயின் மதிப்பு 10 பைசா வீழ்ச்சியடைந்து, 71.42 ரூபாயாக வர்த்தகமாகிய நிலையில், தற்போது 71.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த திங்கட்கிழமையன்று 71.32 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த திங்கட்கிழமையன்று மட்டும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 374.06 கோடி ரூபாயை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதே போல 10 ஆண்டு அரசாங்க பத்திர விளைச்சல் இன்று காலை வர்த்தகத்தில் 6.39% ஆக இருந்தது. கொரோனா தாக்கத்தின் மத்தியில் முதலீட்டாளர்கள் பயத்தில் தங்களது முதலீடுகளை தவிர்த்து வருவதே இதற்கு காரணம் என்றும், சீனா பதற்றத்தினால் இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கலாம் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்திய பங்கு சந்தை
இதனால் இந்திய பங்கு சந்தைகள் அதிக வீழ்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 419 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 40,636 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 131 புள்ளிகள் 11,914 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.