சீனாவின் தற்போது நிலவி வரும் மோசமான நிலைக்கு மத்தியில் பொருளாதாரத்தில் சரிவினைக் காணலாம் என ஆய்வாளர்களும், ஆய்வு நிறுவனங்களும் கூறி வருகின்றன.
சீனாவில் முன்னதாக கொரோனாவின் தாக்கம், அதன் பின்னர் பொருளாதார மந்தம், தற்போது நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக, அங்கு கடுமையான மின்வெட்டு நிலவி வருகின்றது.
இதன் காரணமாக சீன நிறுவனங்களின் உற்பத்தி திறன் மோசமான பாதிப்பினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்திய நிறுவனங்களுக்கு சாதகம்
இதனால் இனி வரும் காலாண்டுகளிலும் சீனாவின் உற்பத்தி விகிதமானது, பெரும் சரிவினை காணலாம் என்ற அச்சமும் இருந்து வருகிறது. இதற்கு பல முக்கிய காரணிகள் உள்ள நிலையில், இந்த சரிவானது இந்திய நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்த வகையில் இந்திய நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம் வாருங்கள் பார்க்கலாம்.
ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல்
இரும்பு உற்பத்தி நிறுவனமான ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் தனது இரண்டாவது காலாண்டு அறிக்கையில், வருவாயானது முந்தைய காலண்டுடன் ஒப்பிடும்போது 350% அதிகரித்து, 7,179 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது உள்ளீட்டு செலவுகளை குறைத்து, தேவை அதிகமாக உள்ள நிலையில், இது வழக்கத்துக்கு மாறாக உற்பத்தியானது அதிகரித்துள்ளது. இதுவே இந்தளவுக்கு வளர்ச்சியினை காண வழிவகுத்துள்ளது.
நிலக்கரி விலையேற்றம்
தற்போது நிலக்கரியின் விலையானது 300% மேலாக அதிகரித்து, டன்னுக்கு 120 டாலரில் இருந்து, டன்னுக்கு 400 டாலராக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் டன்னுக்கு 10 - 20 டாலர்கள் அதிகரித்து வருகின்றது. இது தொடர்ந்து அதிக ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. இந்த நிலையை எதிர்கொள்ள நிறுவனங்கள் மாற்று வழி என்ன என்று ஆராய்ந்து வருகின்றன.
ஸ்கிராப் விலை அதிகரிப்பு
இதற்கிடையில் ஸ்கிராப் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் உலோக விலைகள் மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. குறிப்பாக இரும்பு விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. உதாரணத்திற்கு ஐரோப்பிய தொழிற்துறையில் மின்சார கட்டணம் உயர்ந்த போது, உலோக கட்டணங்களின் விலையானது டன்னுக்கு 50 பவுண்டுகள் வரையில் அதிகரித்தது.
கார்ன் உமிழ்வை குறைக்க திட்டமிடும் சீனா
உலகின் பல நாடுகளிலும் கார்பன் உமிழ்வை குறைப்பது என்பது பெரும் சிக்கலான விஷயமாக உள்ளது. குறிப்பாக சீனாவுக்கு இது மிகப்பெரிய சவாலாகவும் இருந்து வருகின்றது. தற்போது உலகளவில் கார்ப்பன் உமிழ்வை அதிகமாக கொண்டிருப்பது சீனா தான். இதனால் சீனா தற்போது கார்பன் உமிழ்வை தடுக்கும் விதமாக, பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
நிலக்கரி பயன்பாடு குறைக்கணும்
இதனால் சீனாவின் மிக நீண்டகால முக்கிய மூலாதாரமாக நிலக்கரி இருந்து வரும் நிலையில், நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக 2026ல் இருந்து குறைத்துக் கொள்வதாகவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது. ஆக சீனாவின் இந்த நடவடிக்கையானது இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை சரிவு
சீனாவில் தற்போது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இரும்பின் தேவையானது குறைந்து வருகின்றது. குறிப்பாக சீனாவில் தற்போது பொருளாதாரம் வளர்ச்சி சற்று சரிந்து வரும் நிலையில், ரியல் எஸ்டேட் மீதான முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அங்கு இரும்பின் தேவையும் குறைந்துள்ளது. உலோகங்களின் தேவையானது 23% வீழ்ச்சி கண்டுள்ளது.
நுகர்வு அதிகரிப்பு
எனினும் உலகின் மற்ற நாடுகளில் தேவையானது புத்துணர்ச்சி பெற்றுள்ளது எனலாம். தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவில் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் இரும்பின் நுகர்வானது, 49MT ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 36.5 MT ஆக இருந்தது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் கூடுதலாக 13 MT மட்டுமே அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிக்கும்
எனினும் இரண்டாம் பாதியில் தற்போது பருவமழை காரணமாக ஸ்டீல் தேவை இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இரும்பின் தேவையானது அதிகரிக்கலாம். மேலும் சீனாவின் காலியிடமானது இரண்டாம் பாதியில் இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமையலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.