டெல்லி: இந்தியாவிலேயே ஒரு பொருள் தயாரிக்கப்பட்டு, சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் விலையை விட அதிகமாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்தால், இறக்குமதி செய்யப்படும் பொருள் தான் ஸ்டீல்.
இந்தியா கடந்த பல வருடங்களாக, ஸ்டீல் ஏற்றுமதியாளராக இருக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஏற்றுமதியாளர், இறக்குமதியாளர் என மாறிக் கொண்டே இருக்கிறது இந்தியாவின் நிலை.
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியா, நிகர இறக்குமதியாளராகி இருக்கிறது. 2018 - 19 நிதி ஆண்டில் க்ரூட் ஸ்டீல் உற்பத்தியை அதிகரித்து இருக்கிறது இந்தியா. கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 110.92 மில்லியன் டன் க்ரூட் ஸ்டீல் உற்பத்தி செய்து இருக்கிறோம். ஆனால் அதற்கு முந்தைய 2017 - 18 நிதி ஆண்டில் 103.13 மில்லியன் டன் க்ரூட் ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆக சுமார் 7 சதவிகிதம் கூடுதலாக க்ரூட் ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது என, மத்திய ஸ்டீல் மற்றும் எண்ணெய் வளத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான், பாராளுமன்ற மக்களவையில் சொல்லி இருக்கிறார்.
அதே நேரத்தில் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியா 6.36 மில்லியன் டன் ஸ்டீல் மட்டுமே ஏற்றுமதி செய்து இருக்கிறதாம். 2017 - 18 நிதி ஆண்டில் இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி 9.62 மில்லியன் டன்னாக இருந்ததையும் சொல்லி இருக்கிறார் ஸ்டீல் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். ஆக இந்தியாவின் ஸ்டீல் ஏற்றுமதி சுமாராக 33.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள், இந்தியா, ஸ்டீல் ஏற்றுமதியாளராக இருக்கும் என சமீபத்தில் ஸ்டீல் மற்றும் எணெய் வளத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் சொன்னது இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது.
இந்தியா தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் விற்கக் கூடிய ஸ்டீல்களைத் தயாரித்து வருகிறது. ஸ்டீல் வியாபாரத்தைப் பொறுத்த வரையில், சில நேரங்களில் இந்தியா இறக்குமதியாளராகவும், சில நேரங்களில் இந்தியா ஏற்றுமதியாளராகவும் இருக்கிறது. இந்த முறை இந்தியா நிகர இறக்குமதியாளராக இருகிறது. ஆனால் கூடிய விரைவில் இந்தியா, ஸ்டீல் வியாபாரத்தில் ஏற்றுமதியாளராக நிலைத்து நிற்கும் என சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.