அமெரிக்காவும் இந்தியாவும் பல ஆயிரம் மைல் தொலைவில இருந்தாலும், இந்திய ஊழியர்களுக்கும், அமெரிக்க நிறுவனங்களுக்கும் அப்படி ஒரு நெருக்கமான பந்தம்.
அதோடு அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவர்களிலும் அதிகம் இந்திய மாணவர்கள் தான். இதனால் அமெரிக்காவில் ஏற்படும் சிறுமாற்றம் கூட, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கிறது.
இதனால் லட்சக்கணக்கான இந்திய குடும்பங்களும் அமெரிக்காவில் சென்று வசித்து வருகின்றன. அதெல்லாம் சரி ஹெச் 1பி, ஹெச்4 விசா. இது குறித்து ஏற்கனவே பல முறை படித்திருப்போம்.
இரு வகை விசாக்கள்
ஹெச் 1பி விசா மூலம் மற்ற நாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் சென்று பணிபுரிந்து கொள்ளலாம். எனினும் இந்த வகை விசா குறிப்பிட்ட முக்கிய துறை ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் வழங்கும் விசாக்களில் குடியேற்ற உரிமை உள்ள விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத விசா என இரண்டு வகைகளே பிரதானமானவை. அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் குடியேற்ற உரிமையுள்ள விசாக்கள் வழங்கப்படும். இதுவே தற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும்.
H1B விசா – H4 விசா
H1B விசா குடியேற்ற உரிமை அல்லாத விசா வகையின் கீழ் வருகிறது. இந்த விசா மூன்று பிரிவுகளின் வழங்கப்படுகிறது. ஒன்று பொது ஒதுக்கீடு, இரண்டாவது முதுநிலை படிப்புக்காக வழங்கப்படுகிறது. மூன்றாவது தடையில்லா வர்த்தக பிரிவினருக்கு வழங்கப்படுகிறது. இதே ஹெச்1பி விசா பெற்றவர்களின் குடும்பர் உறுப்பினர்களுக்கு சார்பு விசா (H4) வழங்கப்படுகிறது.
இந்தியர்களுக்கு தடை
தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்களை பல நாடுகளும் தடை செய்துள்ளன. அந்த வகையில் அமெரிக்காவும் மே 4 முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா வருவதற்கு தடை மற்றும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்கர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் தவிப்பு
இதனால் ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள், மாணவர்கள், சார்பு விசா பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் என பல ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல முடியாத நிலையே இருந்து வருகின்றது. அதோடு இந்த தடை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் மாணவர்கள் தங்களது கல்வி படிப்பினை தொடர முடியாமலும், ஊழியர்கள் வேலையின்றி தவிக்கும் சூழலும் இருந்து வருகின்றது.
கொரோனாவால் பயணத் தடை
முன்னதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு இந்த ஹெச்1பி விசாவினை தடை செய்திருந்தார். இதனால் பல ஆயிரம் ஐடி ஊழியர்கள் அமெரிக்க செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதன் பிறகு புதியதாக பதவியேற்ற ஜோ பைடன் அரசு, பழைய லாட்டரி முறையில் ஹெச்1பி விசா வழங்கும் வகையில் வழிவகை செய்துள்ளது. இது இந்திய ஊழியர்களுக்கு ஆதரவான விஷயமாக பார்க்கப்பட்டது. எனினும் தற்போது கொரோனா பயணத் தடையால் மீண்டும் அமெரிக்கா செல்ல முடியாமல் ஊழியர்கள், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.