ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது குண்டு மழை பொழிந்த போது அந்நாட்டு மக்கள் அண்டை நாட்டுக்கு ஓடிக்கொண்டு இருந்த நிலையில், பல கனவுகள் உடன் உக்ரைனுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பதுங்கியிருந்தனர்.
இந்திய அரசு ரஷ்யா, உக்ரைன் உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இந்திய மாணவர்களை உக்ரைன் நாட்டில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இந்தியா அழைத்து வரப்பட்ட உக்ரைன் மாணவர்களின் கடன் நிலுவை பற்றி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
உக்ரைன்
உக்ரைன் நாட்டில் படித்துக்கொண்டு இருந்த மாணவர்கள் இந்தியாவிற்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்கள் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முழுமையாகத் தெரியாத நிலையில், தற்போது உக்ரைன் மாணவர்களின் கல்விக்கடன் நிலுவை தரவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
21 தனியார் வங்கிகள்
இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள அறிக்கையின் படி டிசம்பர் 31, 2021 முடிவில் இந்தியாவில் 21 தனியார் வங்கிகள் பகிர்ந்துள்ள தரவுகள் படி, உக்ரைனில் இருந்து இந்தியா வந்துள்ள மாணவர்களில் 1319 பேர் சுமார் 121.61 கோடி ரூபாய் கடனை நிலுவையில் வைத்துள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.
கடன் தள்ளுபடி
உக்ரைனில் இருந்து இந்தியா வந்துள்ள மாணவர்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்த நிலையில், அரசு தற்போது இருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மாணவர்கள் தங்களது கல்வியை இந்தியாவில் தொடர்வது குறித்தும் முடிவு எடுக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கேள்வி
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து இந்திய அரசின் திட்டங்கள் பற்றிக் காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங் பிட்டு மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
நிர்மலா சீதாராமன் பதில்
இந்தியா திரும்பிய மாணவர்களின் நிலுவையில் உள்ள கல்விக் கடன்களில் ஏற்பட்ட தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்கவும் இந்திய வங்கிகள் சங்கத்தைக் கேட்க அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்தியாவில் கல்வி
இதேவேளையில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி உறுப்பினர்கள் பி.வி.மிதுன் ரெட்டி மற்றும் எம்.ஸ்ரீனிவாசுலு ரெட்டி ஆகியோர் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்கள் படிப்பை முடிக்க அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
மத்திய அரசின் முடிவு
பிப்ரவரி 1, 2022 முதல் சுமார் 22,500 இந்திய மக்கள் பெரும்பாலும் மாணவர்கள், உக்ரைனில் இருந்து இந்தியாவுக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர் என அரசு தரவுகள் கூறுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் முடிவுகளுக்காக மிகப்பெரிய மாணவர் கூட்டம் காத்திருக்கிறது.