உலகமே இன்று வியந்து பார்க்கும் ஒரு முக்கியமான நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா நிறுவனம். இந்நிறுவனம் வெறும் 20 வருடத்தில் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. குறிப்பாக இன்று உலக நாடுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வண்ணம் பெட்ரோல், டீசல் கார்களை மொத்தமாகத் தடை செய்யும் மன உறுதியை உருவாக்கியுள்ளது.
இப்படி உலகம் முழுவதும் பலரும் பல விதமாகப் போற்றப்படும் டெஸ்லா நிறுவனத்தின் முக்கியமான பிரிவை ஒரு இந்தியர் அதுவும் முக்கியமாக ஒரு தமிழர் ஆண்டு வருகிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..!!!
டெஸ்லா கார்
டெஸ்லா கார்களைத் தற்போது உலக நாடுகள் வியந்து பார்க்க மிக முக்கியமான காரணம் அது ஒரு எலக்ட்ரிக் காராக மட்டும் இருப்பது இல்லை. இன்று டெக் சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதால் எலக்ட்ரிக் கார்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும்.
ஆட்டோ பைலட் சேவை
ஆனால் டெஸ்லா அனைத்து கார்களுக்கும், அனைத்துக் கார் பிராண்டுகளுக்கும் முன்னோடியாக இருக்க மிக முக்கியமான காரணம் விமானத்தில் இருப்பது போலவே டெஸ்லா கார்களில் இருக்கும் ஆட்டோ பைலட் சேவை தான்.
பல நிறுவனங்கள் முயற்சி
கூகுள் உட்படப் பல டெக் சேவை நிறுவனங்கள் நீண்ட காலமாக ஆட்டோனமஸ் கார்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி பல வருடமாக முயற்சி செய்து வரும் நிலையில் டெஸ்லா நிறுவனம் இதில் குறைந்த காலகட்டத்திலேயே வெற்றி கண்டது மட்டும் அல்லாமல் தொடர்ந்து மெருகேற்றி வருகிறது.
இந்நிலையில் இந்த மாபெரும் வெற்றிக்கு உண்மையான காரணம் யார் என்பதை எலான் மஸ்க் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் லெர்ஸ் ப்ரிட்மேன் உடனான பாட்கேஸ்ட் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது டெஸ்லா ஆட்டோபைலட் சேவை குறித்துப் பேசும் போது எலான் மஸ்க், பொதுவாக டெஸ்லா-வின் ஆட்டோபைலட் சேவை குறித்து மக்கள் பாராட்டும் போது என்னையும், AI பிரிவு தலைவரான ஆண்ட்ரேஜ் பாராட்டுவார்கள்.
அசோக் தான் காரணம்
ஆனால் உண்மையில் இந்தப் பாராட்டுக்குச் சொந்தக்காரர் அசோக் தான், இவர் தான் ஆட்டோபைலட் இன்ஜினியரிங் பிரிவின் தலைவர். இவர் தலைமையில் தான் டெஸ்லா கார்களுக்கான ஆட்டோபைலட் சேவை உருவாக்கப்பட்டுத் தற்போது செயல்முறைக்கு வந்துள்ளது.
டெஸ்லா ஆட்டோபைலட் AI குழு மிகவும் திறமையானது. உலகில் புத்திசாலிகள் சிலர் இந்த அணியில் உள்ளனர் எனவும் எலான் மஸ்க் இந்தப் போட்காஸ்ட் விவாதத்தில் பேசினார்.
முதல் நபர்
இதைத் தொடர்ந்து டிவிட்டரில் வெளியான இந்தப் போட்காஸ்ட் வீடியோவுக்கு, அசோக் தான் டெஸ்லா ஆட்டோபைலட் அணிக்கு முதல் ஆளாகத் தேர்வு செய்யப்பட்ட நபர் என்று தனது டிவீட்டில் பதிவிட்டு உள்ளார்.
7 வருட உழைப்பு
இது மட்டும் அல்லாமல் அடுத்த டிவீட்டில் சுமார் 7 வருடம் கடுமையான உழைப்பில் இது உருவாக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார், இதோடு டெஸ்லா ஆட்டோபைலட் சேவை மற்றும் ஸ்டார்ஷிப் இன்ஜின் தான் தற்போது நாங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலான விஷயம் என்றும் கூறியுள்ளார் எலான் மஸ்க்.
டெஸ்லா-வை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் கலக்கும் இந்த அசோக் யார்.
அசோக் எல்லுசாமி
அசோக் எல்லுசாமி என்பது தான் இவருடைய முழுப் பெயர், பெயரைப் பார்த்ததும் இவர் தமிழராக இருக்க வாய்ப்பு உள்ளது என நினைத்த அனைவருக்கும் 100க்கு 100 மார்க். 2005-2009 ஆண்டுகளில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ECE பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார், படிப்பை முடித்த உடனே சென்னையில் WABCO வாகன கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகச் சுமார் 2.4 வருடம் பணியாற்றியுள்ளார்.
கார்கி மெலான் பல்கலைகழகம்
பணி அனுபவத்தைப் பெற்ற அசோக் எல்லுசாமி இன்ஜினியரிங் படிப்புக்கு பெயர்போன அமெரிக்காவின் கார்கி மெலான் பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். இதன் பின்பு சுமார் 8 மாதம் வோக்ஸ்வாகன் எலக்ட்ரானிக் ரிசர்ச் லேப்-ல் ஆராய்ச்சி பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
டெஸ்லா 8 வருட பயணம்
ஜனவரி 2014ல் டெஸ்லா ஆட்டோபைலட் பிரிவின் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்த அசோக் எல்லுசாமி கடந்த 8 வருடத்தில் டெஸ்லா ஆட்டோபைல்ட் பிரிவின் தலைவராக உயர்ந்துள்ளார்.
லின்ங்கிடுஇன் தளம்
அசோக் எல்லுசாமி குறித்துச் சமுக வலைத்தளத்தில் பெரிய அளவிலான விபரங்கள் இல்லாத நிலையில் அவருடைய லின்ங்கிடுஇன் தளத்தில் அவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 4 மொழிகள் பேசுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர்
அதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு மட்டும் தான் Native or bilingual proficiency எனக் கொடுத்துள்ளார், மற்ற இரு மொழிகளுக்கும் Elementary proficiency எனக் கொடுத்துள்ளார். இதன் மூலம் தமிழர் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.