இந்திய ஐடி நிறுவனங்கள் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பல முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ளத் தாயாராகி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் மட்டும் 2021-22ஆம் நிதியாண்டில் அதாவது நடப்பு நிதியாண்டில் சுமார் 96000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இந்திய ஐடி துறை
ஐடி துறையில் இது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் காரணத்தால், புதிதாக இத்துறைக்குள் வர விரும்புவோருக்கும், ஏற்கனவே இத்துறையில் இருப்பவருக்கும் இது ஜாக்பாட் ஆக விளங்குகிறது.
புதிய வேலைவாய்ப்புகள்
புதிய தொழில்நுட்ப பயன்பாடு, அதிகரித்து வரும் ஆட்டோமேஷன் திட்டங்கள், ஐடி வேலைவாய்ப்புக் கட்டமைப்பு முறை ஆகியவற்றின் மூலம் 2021 நிதியாண்டில் இந்திய ஐடித்துறையில் சுமார் 1,38,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது என்று நாஸ்காம் அறிவித்துள்ளது.
டாப் 5 ஐடி நிறுவனங்கள்
இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் மட்டும் சுமார் 96,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது. டாப் 5 ஐடி நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎஸ், காக்னிசென்ட் உள்ளது.
டிஜிட்டல் வர்த்தகத் துறை
இந்திய ஐடி துறை சுமார் 2,50,000 ஊழியர்களை ஏற்கனவே வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்துள்ளது. இதோடு புதிதாக 40000 ஊழியர்களை டிஜிட்டல் துறையில் பணியில் அமர்த்தியுள்ளது.
350 பில்லியன் டாலர் வர்த்தகம்
இதன் மூலம் ஐடித்துறையில் இலக்கு மற்றும் ஸ்திரமான எதிர்காலம் வெளிப்படுகிறது. இந்த வேகம் தொடர்ந்தால் 2025ஆம் ஆண்டுக்குள் இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாய் 300 முதல் 350 பில்லியன் டாலர் வரையில் உயரும் எனத் தெரிவித்துள்ளது.
பாங்க் ஆப் அமெரிக்கா அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்நிலையில் பாங்க் ஆப் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்திய ஐடி துறையில் 2022ஆம் ஆண்டுக்குள் சுமார் 30 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க உள்ளதாகக் கணித்துள்ளது.
30 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்
30 லட்சம் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கப்படுவதன் மூலம் சம்பளம் மற்றும் இதர செலவுகள் வாயிலாக மட்டுமே சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்திய ஐடி நிறுவனங்கள் சேமிக்க முடியும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறைந்த திறன் சேவை, பிபிஓ பிரிவு
டெக் துறையில் இருக்கும் நிறுவனங்களும், உள்நாட்டு மென்பொருள் சேவை நிறுவனங்கள் ஆட்டோமேஷன்-ஐ கையில் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்திய ஐடி துறையில் சுமார் 1.6 கோடி ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 90 லட்சம் பேர் குறைந்த திறன் சேவை பிரிவுகளிலும், பிபிஓ பிரிவுகளிலும் பணியாற்றி வருகிறார்கள் என நாஸ்காம் தரவுகள் கூறுகிறது.
ஆட்டோமேஷன் ஆதிக்கம்
குறைந்த திறன் சேவை பிரிவு மற்றும் பிபிஓ பிரிவுகளில் ஆட்டோமேஷன் அதிகளவில் புகுத்தப்படும் காரணத்தால் 90 லட்சம் ஊழியர்களில் 30 சதவீதம் அல்லது 30 லட்சம் ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.
7 லட்சம் பேர் வேலை இழப்பு
இதில் குறிப்பாக 7 லட்சம் பேரின் வேலைகள் முழுமையாக ஆட்டோமேஷன் செய்யப்பட உள்ளது. இதர வேலைவாய்ப்புகள் ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வரும் டெக்னாலஜி மேம்பாடு, ஆட்டோமேஷன் மூலம் மீதமுள்ள 23 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடம் சூழ்நிலை உருவாக உள்ளது.
நாஸ்காம் விளக்கம்
இதற்கிடையில் நாஸ்காம் இந்திய BPM பிரிவில் (domestic மற்றும் in-house இல்லாமல்) பணியாற்றுவோர் எண்ணிக்கை 90 லட்சம் இல்லை வெறும் 14 லட்சம் தான். இதேபோல் மொத்த IT-BPM துறையில் பணியாற்றுவோர் எண்ணிக்கை மார்ச் 2021 நிலவரத்தின் படி 45 லட்சம் மட்டுமே எனத் தரவுகளைத் தெளிவுபடுத்தியுள்ளது.