இந்தியாவின் முன்னணி பேமெண்ட் சேவை தளமாக விளங்கும் கூகிள் பே, இந்திய நிறுவனங்களான போன்பே, பேடிஎம் ஆகியவற்றுடன் கடுமையாகப் போட்டிப்போட்டு வரும் நிலையில், தனது சேவையை அடுத்தகட்டத்திற்கு விரிவாக்கம் செய்துள்ளது.
கூகிள் பே இதுநாள் வரையில் ஸ்கேன் பேமெண்ட், யூபிஐ பேமெண்ட், பில் பேமெண்ட் என உள்நாட்டுப் பேமெண்ட் சேவைகளை மட்டுமே அளித்து வந்த நிலையில், தனது வர்த்தகத்தையும் சேவைகளையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு வெளிநாட்டுப் பேமெண்ட் சேவைக்குள் நுழைந்துள்ளது.
கூகிள் பே பேமெண்ட் சேவை
தமிழரான சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகிள் நிறுவனத்தின் பேமெண்ட் சேவை செயலியான கூகிள் பே-வின் இந்தியா மற்றும் சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் இனி அமெரிக்காவில் எவ்விதமான தடையுமின்றிப் பணத்தைப் பெறலாம்.
சேவை விரிவாக்கம்
கூகிள் பே-வின் இப்புதிய சேவை விரிவாக்கத்தின் மூலம் சுமார் 700 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தைக்குள் நுழைந்துள்ளது. இப்பிரிவு சேவையில் இந்திய நிறுவனங்கள் இதுவரையில் நுழையாத நிலையில் கூகிள் பே பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும்.
கூகிள் பே கூட்டணி
வெளிநாட்டுப் பேமெண்ட் சேவைக்காகக் கூகிள் பே, இப்பிரிவில் முன்னோடியாக விளங்கும் Western Union மற்றும் WISE ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் நபர் பணத்தை அனுப்பும் போது Western Union மற்றும் WISE இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
எக்ஸ்சேஞ்ச் ரேட் மற்றும் டிரான்ஸ்பர் கட்டணம்
மேலும் டாலர் கணக்கில் இருந்து ரூபாய்க்கு கணக்கிற்கு மாற்றப்படும் போது, பண அனுப்பும் வேளையில் எக்ஸ்சேஞ்ச் ரேட் மற்றும் டிரான்ஸ்பர் கட்டணம் ஆகியவை தெரிந்துகொள்ள முடியும்.
கட்டணம் யார் செலுத்த வேண்டும்
இதேபோல் அமெரிக்காவில் இருந்து பணத்தை அனுப்பும் போது இந்தியாவில் இருக்கும் நபர் பணத்தை முழுமையாகப் பெறுவார், ஆனால் கட்டணம் அமெரிக்காவில் பணம் அனுப்புவோர் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் இந்தியா மற்றும் சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் முழுமையாகத் தொகையைப் பெறுவார்கள்.
200 நாடுகளுக்கு விரிவாக்கம்
கூகிள் இந்தச் சேவையை இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைத் தாண்டி உலகில் சுமார் 200 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
துவக்க சலுகை
மேலும் துவக்க சலுகையாக Western Union பயன்படுத்திப் பணம் அனுப்புவோருக்கு ஜூன் 16 வரையில் எவ்விதமான கட்டணமும் இல்லாமல் பணத்தை அனுப்ப முடியும். இதேபோல் WISE பயன்படுத்திப் பணத்தை அனுப்புவோருக்கு 500 டாலர் வரையில் கட்டணமின்றி அனுப்ப முடியும்.
இந்தியர்கள் பணத்தை அனுப்ப முடியாது.
ஆனால் ஒரு பிரச்சனை உள்ளது, கூகிள் பே வாயிலாக அனுப்பப்படும் பணம் ஒற்றை வழியில் மட்டுமே இயங்கும், அதாவது அமெரிக்காவிலிருந்து மட்டுமே இந்தியாவிற்கு அனுப்ப முடியும், ஆனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாது.
NRI இந்தியர்கள்
அமெரிக்காவில் பல லட்சம் இந்தியர்கள் இருக்கும் நிலையில் 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து பிற நாடுகளுக்கு மக்கள் அதிகப் பணம் அனுப்பியது இந்தியா தான்.
78.6 பில்லியன் டாலர்
2018 மட்டும் சுமார் 78.6 பில்லியன் டாலர் தொகையை NRIகள் இந்தியாவில் இருக்கும் அவர்களது உறவினர் மற்றும் குடும்பங்களுக்கு அனுப்பியுள்ளனர். இந்தியாவைத் தொடர்ந்து சீனா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் உள்ளது.