ஈரான் போர் பல வழிகளில் இந்தியர்களுக்கு பிரச்சினையை தந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் மார்ச் மாதம் முதல் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எல்பிஜி சப்ளை தடைபட்டு போயுள்ளது. என்னதான் அரசு மற்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி நிலைமையை சரிக்கட்டினாலும் 100% பழைய நிலைமை திரும்பவில்லை.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் , கேஸ் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. சாதாரண மக்களின் குடும்ப செலவு ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் என்றால் அமெரிக்க டாலர் கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க டாலரை தான் கொடுக்க வேண்டும். எனவே ரூபாயை கொடுத்து டாலரை வாங்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் எண்ணெய் விலை உயர்வால் கையிருப்பில் இருக்கும் டாலரும் கரைந்து வருகிறது. இதனால் தான் பிரதமர் மோடி மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டார். அதாவது கையில் இருக்கும் டாலரை தங்கம் வாங்க கொடுத்து விட்டால் அத்தியாவசிய பொருளான கச்சா எண்ணெய் வாங்க டாலர் இல்லாமல் போகும்.
இந்தியாவுக்கு தற்போதைய தேவை அமெரிக்க டாலர். கையிருப்பில் இருக்கும் டாலர் அளவு குறைய கூடாது அதே வேளையில் டாலர் வரத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காக அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி விலக்கு அளித்து மத்திய அரசு முக்கிய கொள்கை மாற்றம் கொண்டு வந்துள்ளது.

இதுநாள் வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்து வருமானம் பார்க்கும் போது இரண்டு முக்கியமான வரிகளைச் செலுத்த வேண்டியிருந்தது. ஒன்று நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG -12.5% ). அதாவது அரசு பத்திரங்களை நீண்ட நாட்கள் வைத்திருந்து விற்கும்போது கிடைக்கும் லாபத்திற்கு விதிக்கப்படும் வரி. அடுத்ததாக வட்டி மீதான வரி (Withholding Tax -20%) அரசு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு விதிக்கப்படும் வரி.
முதலீட்டை வைத்திருந்தாலும் வரி அதில் கிடைக்கும் வட்டிக்கும் வரி என அனைத்திற்கும் வட்டி விதிக்கப்படுவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய முதலீடுகளை கைகழுவி வெளியேறுகின்றனர். அவர்களை மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்ய வைக்க அரசு இந்த இரண்டு வரிகளையும் முழுமையாக நீக்கியுள்ளது.
எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய பத்திரங்களில் செய்யும் முதலீட்டு வரி கிடையாது. வரி இல்லை என்பதால் கையில் கிடைக்கும் லாபம் அதிகரிக்கும். எனவே முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்வார்கள். இதனால் அமெரிக்க டாலர் வந்து குவியும். இவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக டாலரை கொண்டு வரும் போது இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்.
பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடுகள் குறுகிய காலத்தில் வெளியேற வாய்ப்புள்ளது. ஆனால், அரசுப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகள் நீண்ட காலத்திற்குச் நிலையாக இருக்கும். இது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பாதுகாப்பைத் தரும். டாலர் வரத்து அதிகமாகும் போது நம் கைவசம் டாலர் சேமிப்பு அதிகமாகும். எனவே தடையின்றி நம்மால் கச்சா எண்ணெய் வாங்க முடியும். கச்சா எண்ணெய் தடையின்றி வாங்கினால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். இல்லை என்றாலே இந்தியாவே ஸ்தம்பித்து போகும்.


Click it and Unblock the Notifications


