மும்பை: இந்தியாவில் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டானது பரவலான பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
இது குறித்து பல்வேறு தரப்பினரிடமும் பலத்த ஆலோசனையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தி வருகின்றார்.
இதற்கிடையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கோரிக்கையினை வைத்து வருகின்றனர். குறிப்பாக கிரிப்டோகரன்சிகள் குறித்தான முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட் தாக்கலில் வெளியாகலாம் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இந்தியாடெக் கோரிக்கை
இந்தியாடெக் (IndiaTech) ஸ்டார்ட் அப் நிறுவனம், கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதித்தல் தொடர்பாக தெளிவுப்படுத்த வேண்டும். இது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்ற கடித்தத்தினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் கிரிப்டோ குறித்தான ஓரு தெளிவு வேண்டும். இதற்காக சில வரி சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
கிரிப்டோ மசோதா தாமதம்
இது சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, கிரிப்டோ மசோதா தாமதமான நிலையில், இந்த கோரிக்கையானது எழுந்துள்ளது. இதன் மூலம் கிரிப்டோகளுக்கான் வரி விதிப்பு முறைகள் குறிப்பாக தெளிவான அறிவிப்பு வரலாம். கிரிப்டோக்கள் ஒழுங்குபடுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
வரி மோசடி
ஜிஎஸ்டி கவுன்சிலில் பொருந்தக்கூடிய தன்மை பற்றி விவாதிக்கப்பட வேண்டும். மசோதாவுக்காக காத்திருக்காமல், பட்ஜெட்டில் இதற்கான செயல்பாட்டினை தொடங்க வேண்டும்.
சமீபத்தில் இந்திய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான WazirX 40 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.
ரூ.40 கோடி வரி ஏய்ப்பு
வாசிர் எக்ஸ் (WazirX) நிறுவனத்தினை நிர்வகிக்கும் ஜான்மாய் லேப்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (Zanmai Labs Private Ltd) நிறுவனம் 40 கோடி ரூபாய்க்கு சரக்கு மற்றும் சேவை வரியில் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டது. மேலும் அதற்கு முன்பு நிலுவையில் உள்ள 49.2 கோடி ரூபாய் தொகையையும் மறைமுக வரிகள் துறை மீட்டுள்ளதாக கூறியது நினைவுகூறத்தக்கது.
டிஜிட்டல் சொத்தாக அங்கீகரியுங்கள்
எனினும் ஆய்வாளர்கள் ஜிஎஸ்டியின் வெவ்வேறு வணிக மாதிரிகளில், பொருந்தக் கூடிய வரி எது என்ற குழப்பம் நீடித்து வருகின்றது. இது குறித்த தெளிவு என்பது இல்லை. ஆக அரசு அதனை தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் கிரிப்டோகரன்சிகளை இந்திய அரசு டிஜிட்டல் சொத்துகளாக அங்கீகரிக்க வேண்டும் என நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது. தற்போது வரை கிரிப்டோகரன்சிகளுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படும் என்பது குறித்தான உறுதியான தகவல் இல்லை. அவை எந்த வகையான சொத்துகள் என்பது குறித்தான குழப்பமும் உள்ளது.
பரிந்துரை
தற்போது பல்வேறு சொத்துகளின் மீதான வருமான வரி 10% - 35% வரையில் உள்ளது. ஜிஎஸ்டி விகிதங்கள் கிரிப்டோக்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்தும் இந்த வரி விகிதம் இருக்கலாம். இதற்கிடையில் கிரிப்டோக்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியினை விதிக்கலாம் என பரிந்துரையை செய்துள்ளது இந்தியா டெக் நிறுவனம்.
முக்கிய பரிந்துரை
மற்றொரு முக்கிய பரிந்துரை என்பது கிரிப்டோக்களில் முதலீடு செய்பவர்கள் KYC விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
நாளுக்கு நாள் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், கிரிப்டோ மசோதாவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதன் மூலம் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. எனினும் கிரிப்டோகரன்சிகளை முழுமையாக தடை செய்யாமல், அதனை ஒழுங்குபடுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. ஆக இது குறித்தான முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
ஏற்கனவே கிரிப்டோகரன்சி மூலம் கிடைத்த வருவாய்க்கு மூலதன ஆதாய வரி விதிப்பது பற்றி ஆலோசனையும் நடந்து வருகிறது. இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறோம். இதெல்லாம் பட்ஜெட் சம்பந்தப்பட்ட வேலை. எனவே, பட்ஜெட்டில் இதுபற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆக நிச்சயம் இது குறித்தான தெளிவான அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இதே கிரிப்டோ முதலீடு குறித்தான ஒரு தெளிவான அறிவிப்பு வந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களின் முக்கிய எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகின்றது.