இந்திய வர்த்தகச் சந்தையில் போட்டி அதிகமாகியுள்ள நிலையில் தொடர்ந்து நிலையான வர்த்தகம், தரமான சேவை தொடர்ந்து கொடுத்தால் மட்டுமே வர்த்தகத்தை நிலைநாட்ட முடியும்.
இதேவேளையில் ஊழியர்களைத் தக்கவைப்பது என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது, ஒருபக்கம் அதிகப்படியான விலைவாசி, கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகளுக்கு மத்தியில் அதிகம் சம்பளம் கிடைக்கும் இடத்திற்கு ஊழியர்கள் வேகமாக மாறி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் தான் இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ-வில் அடுத்தடுத்து ஊழியர்கள் மாஸ் பங்க் அதாவது மொத்தமாகச் சொல்லி வைத்து ஓரே நாளில் விடுமுறை எடுத்து வருகின்றனர்.
இண்டிகோ
இண்டிகோ நிறுவனத்தில் பைலட் மற்றும் கேபின் க்ரூ ஊழியர்களைத் தொடர்ந்து தற்போது விமானங்களைப் பழுதை சரி பார்க்கும் ஊழியர்களான aircraft maintenance technicians (AMTs) சில முக்கியமான வர்த்தக இடங்களில் மொத்தமாக விடுமுறை எடுத்துள்ளனர்.
ஹைதராபாத் மற்றும் டெல்லி
இண்டிகோ நிறுவனத்தின் ஹைதராபாத் மற்றும் டெல்லியில் aircraft maintenance technicians (AMTs) ஊழியர்கள் தங்களது மோசமான சம்பள உயர்வை எதிர்த்து மாஸ் பங்க் அடித்துள்ளனர். மோசமான சம்பள உயர்வைத் தாண்டி, இன்னும் கொரோனா தொற்றுக்கு முந்தை அளவீட்டில் இருந்து சம்பளத்தைக் கூடக் கிடைக்காமல் உள்ளனர்.
பைலட் மற்றும் கேபின் க்ரூ
சில நாட்களுக்கு முன்பு இதேபோல் இண்டிகோ நிறுவனத்தின் பைலட் மற்றும் கேபின் க்ரூ ஊழியர்கள் பணிநீக்கத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பள உயர்வின் அளவை மறு சீரமைப்புச் செய்யப்பட்டது. இதன் வாயிலாகத் தற்போது AMT ஊழியர்களும் இதே முறையைப் பின்பற்றுகின்றனர்.
இண்டிகோ தகவல்
ஆனால் விமானச் சேவை பாதிக்காத அளவிற்குப் போதுமான ஊழியர்களை உரிய நேரத்தில் அமர்த்தியதால் எவ்விதமான பிரச்சனையும் ஏற்படவில்லை என இண்டிகோ தரப்பில் இருந்து கூறப்படுகிறது. டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கைப்பற்றிய நாளில் இருந்து இத்துறையில் போட்டி அதிகரித்துள்ள நிலையில் ஊழியர்களின் டிமாண்ட் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
நிர்வாக மாற்றம்
இண்டிகோ நிறுவனத்தில் இருந்து சிஇஓ ரோனோஜாய் டட்டா, தலைமை வர்த்தக அதிகாரி வில்லி போல்டர் வெளியேறிய பின்பு மிகப்பெரிய நிர்வாக மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இதேவேளையில் KLM விமான நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் எல்பரஸ் புதிய சிஇஓ-வாகப் பெறுபேற்று இண்டிகோ நிறுவனத்தின் சர்வதேச விமானச் சேவை விரவாக்கத்தைக் கவனிக்க உள்ளார்.
சம்பள குறைப்பு
கொரோனா தொற்றின் போது இண்டிகோ அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் 28 சதவீதம் வரையில் குறைந்தது, இரண்டு முறை உயர்த்தப்பட்டும், கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தைக் காட்டிலும் 16 சதவீதம் குறைவான சம்பளத்தையே இன்டிகோ ஊழியர்கள் பெறுகின்றனர்.