நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள தொழில்துறை, பொருளாதாரம், மக்கள் என அனைவரையும் ஆட்டிப்படைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனாவால் எந்த துறைதான் பாதிக்கப்படாமல் உள்ளது என்றால், நிச்சயம் அதற்கு பதில் சொல்வது கடினம். இப்படி இருக்கையில் அதில் பெரிதும் பாதிக்கப்பட்ட சில துறைகளில் விமானத் துறையும் ஒன்று.
ஒரு புறம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை நீட்டிக்கப்பட்டிருந்த முழு லாக்டவுன் காரணமாக விமான போக்குவரத்தும் தடை விதிக்கப்பட்டது.
பயணம் குறைவு தான்
ஆனால் அதில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பல கட்டுப்பாடுகளுடன் விமான சேவையானது சில இடங்களுக்கு இயக்கப்பட்டு வந்தாலும், மக்கள் அதிகம் பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவினால் தங்கள் அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள், விமான பயணங்களை நிறுத்தி வைத்துள்ளனர். அதோடு கொரோனா தமக்கும் தொற்றி விடுமோ? என்ற பயத்தினாலேயே வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
விமான சேவை ரத்து
இதே வெளி நாடுகளிலும் இதே நிலை என்பதால், சர்வதேச விமானங்களும் முடங்கிக் கிடக்கின்றன. போதிய பயணிகள் இல்லாததால் பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான சேவை நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பினை சந்தித்து வருகின்றன.
வருவாய் இழப்பு
ஏற்கனவே வருவாய் இழப்பு காரணமாக பெரும்பாலான ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டது. சில நிறுவனங்கள் சம்பள குறைப்பு செய்து வந்தன. ஆனால் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமாக இண்டிகோவும் பெரும் வருவாய் இழப்பினை சந்துள்ளதன் காரணமாக, அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 10% பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தம் எத்தனை ஊழியர்கள்
தற்போது இந்த நிறுவனத்தில் 23,500-க்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட இண்டிகோ நிறுவனம், ஏற்கனவே தனது ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு கட்டாய விடுப்பு அளித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பினை கொடுத்துள்ளது.
கொரோனா தான் காரணம்
கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் கொடிய வைரசால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளால், இண்டிகோ வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.