மும்பை: கடுமையான கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் அரசு பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா, விரைவில் இந்த நிறுவனத்தினை வாங்க யாரும் முன் வரவில்லை எனில், இந்த நிறுவனத்தை அடுத்த ஆறு மாதத்திற்கு மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தினை வாங்க இண்டிகோ நிறுவனமும், எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஆர்வம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்தான பேச்சு வார்த்தையில் இந்த இரு நிறுவனங்களின் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த நிறுவனத்தினை வாங்க டாடா குழுமம் ஆர்வம் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நிறுவனம் மௌனம் சாதிப்பது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா, செயல்பாட்டு மூலதனம் கூட இல்லாமல், சில முறை விமானங்களை இயக்க இயலாத அவல நிலைக்கு தள்ளப்பட்டது. இப்படி ஒரு நிலையில் தான் கடந்த ஆண்டுஇ 76 சதவிகித பங்குகளை மட்டும் விற்க ஏர் இந்தியா அறிக்கை விடுத்தது. ஆனால் இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முன்வரவில்லை.
இந்த நிலையில் எப்படியேனும் இந்த நிறுவனத்தினை விற்றால்போதும் என அரசு 100 சதவிகித பங்குகளையும் விற்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் இந்த திட்டத்திற்கும் அவ்வளவாக வரவேற்பு இல்லாத நிலையில் தற்போது இந்த இரு நிறுவனமும் ஆர்வம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது எரிபொருள் கட்டணம் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளவும் கொடுக்க முடியாமல் தவித்து வரும், இந்த நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை விற்க, அரசு ஒரு புறம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இப்படி ஒரு நிலையில் தான் ஏர் இந்தியாவுக்கு சுமார் 60,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க அவ்வளவாக யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய யாரும் வராவிட்டால். இந்த நிறுவனத்தை மேற்கொண்டு நடத்துவது மிகக் கடினம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் ஏற்கனவே எவ்வளவு தான் முதலீடு செய்தாலும், இந்த நிறுவனம் கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதாக தெரியவில்லை. இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் மேலும் முதலீடு செய்ய விரும்பாத நிலையிலேயே அரசு, பங்குகளை விற்க முயற்சித்து வருகிறது. இருப்பினும் தட்டு தடுமாறி எப்படியோ இந்த நிறுவனம் ஒடிக் கொண்டு தான் இருக்கிறது.
இப்படி ஒரு சூழ்நிலையில் நிறுவனத்தை மேலும் 6 மாதங்களுக்கு செயல்படுத்துவதே கடினம். அதற்குள் யாரேனும் வாங்காவிட்டால் கடினம் தான். பிறகு ஏர் இந்தியாவை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் அந்த அதிகாரிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடவுளாய் பார்த்து விட்ட வழி போல ஏர் இந்தியாவை வாங்க இண்டிகோ நிறுவனமும், எதிஹாட் நிறுவனமும் ஆர்வம் தெரிவித்துள்ளன. எது எப்படியோ ஏர் இந்தியாவுக்கு ஒரு நல்ல விடிவு காலம் இருந்தால் சரிதான். பல ஆயிரம் ஊழியர்களின் வேலை காப்பற்றபட்டால் சரி தான்.