இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியின் ஆறுமாத குழந்தை பசியால் அழுத நிலையில் விமான நிறுவன ஊழியர்கள் அந்த குழந்தைக்கு உணவு தர மறுத்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து அந்த குழந்தை விமானப் பயணம் முழுவதும் அழுது கொண்டே வந்ததாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களுக்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இண்டிகோ பயணம்
இதுகுறித்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: நான் எனது 6 மாத குழந்தையுடன் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது எனது குழந்தை திடீரென பசியால் அழுதது. அந்த குழந்தைக்கு உணவு தருமாறு விமான நிலைய ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் என்றாலும் தயார் என்று கூறினேன்.
இண்டிகோ ஊழியர்கள்
ஆனால் இண்டிகோ ஊழியர்கள் முதலில் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு உணவை தந்துவிட்டு பிறகுதான் மற்றவர்களுக்கு உணவு தருவோம் என்றும் கூறினார்கள். என் மகள் பசியால் அழுது கொண்டு இருப்பதாக கூறியும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை என்று கூறியிருந்தார்.
இண்டிகோவின் பதில்
இந்த பதிவுக்கு பதிலளித்த இண்டிகோ பிரதிநிதி, 'உங்களுக்கு நேர்ந்த அனுபவத்திற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். தற்போது உங்கள் குழந்தை நலமாக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் நிச்சயமாக இது குறித்து நடவடிக்கை எடுத்து உங்களுக்கு பதில் அளிப்போம்' என்று கூறியுள்ளார்.
வருத்தம்
இதேபோல் இண்டிகோ நிறுவனத்தின் மற்றொரு பிரதிநிதி கூறிய போது 'உங்களுடைய அனுபவத்திற்கு நாங்கள் வருத்தம் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
இந்த பதிவுக்கு இரண்டு விதமாக நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். 6 மாத குழந்தையை விமானத்தில் அழைத்து செல்லும் போது அந்த குழந்தைக்கு தேவையான உணவுகளையும் எடுத்துச் செல்ல வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்றும் உங்களுடைய கவனக்குறைவை திசை திருப்புவதற்காக விமான நிறுவனத்தின் மீது குறை சொல்வது சரியல்ல என்றும் கூறியுள்ளனர்.
பெற்றோர்களுக்கு பாடம்
இதுகுறித்து சங்கீதா என்ற சமூக வலைத்தள பயனாளி கூறியபோது 'குழந்தைகளின் தேவைகளை கவனிக்காமல் இருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு பாடம் என்றும் ஆறு மாத குழந்தையின் உணவு தேவையை கூட நீங்கள் கையோடு எடுத்துச் செல்ல மாட்டீர்களா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இண்டிகோவுக்கு கண்டனம்
ஆனால் அதே நேரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தை கண்டித்தும் சில சமூக வலைத்தள பயனாளிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications