கடந்த பிப்ரவரி 2020 வரை, கொரோனா நேற்று வரை ஏதோ சுகாதாரத் துறை பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த மார்ச் முதல் கொரோனாவில் கோரப் பிடியில் பங்குச் சந்தைகள் தொடங்கி உலக பொருளாதாரம் வரை பலதும் சிக்கி இருக்கின்றன.
இந்த கொரோனா சூறாவளியில் சிக்கியவைகள் எல்லாமே சின்னா பின்னமாகிக் கொண்டு இருக்கின்றன.
வியாபாரம்
ஏற்கனவே, உலக அளவில் சுற்றுலா, ஹோட்டல்கள், உணவகங்கள், விமான சேவை நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி ஏசியில் உட்கார்ந்து வேலை பார்க்கும் ஐடி ஊழியர்கள் வரை ஒருத்தரை விட வில்லை இந்த கொரோனா வைரஸ். எல்லா துறைகளை அடித்து துவைத்து எடுத்து இருக்கிறது.
விமான சேவைத் துறை
சில வாரங்களுக்கு முன்பே உலக அளவில் விமான சேவைநிறுவனங்கள், இந்த கொரோனா வைரஸால் சுமார் 113 பில்லியன் டாலர் வருவாயை இழக்க வாய்ப்பு இருப்பதாகச் சொன்னது சர்வதேச விமான போக்குவரத்து சங்கம். அவர்கள் சொன்ன கணிப்புகள் எல்லாம் இப்போது பலிக்கத் தொடங்கி இருக்கிறது.
விமான சேவை ரத்து
இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோவும் பலமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸால், சுமாராக 70 % வெளி நாட்டு விமான ட்ரிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறதாம். தினம் தோறும் உள்ளூர் விமான ட்ரிப்புகள் பலதும் ரத்து செய்து கொண்டே இருக்கிறார்களாம். எனவே இண்டிகோ நிறுவனம், தன் செலவைக் குறைத்து நிறுவனத்தை நடத்த, ஊழியர்கள் சம்பளத்தில் கை வைத்து இருக்கிறது.
சி இ ஓ
இண்டிகோ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ரொனொஜாய் தத்தா, மார்ச் 19, 2020 அன்று, இண்டிகோ ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு பற்றிச் சொல்லி இருக்கிறாராம். ஊழியர்கள் வகிக்கும் பதவிக்கு தகுந்தாற் போல 5 - 25 சதவிகிதம் சம்பளம் குறைத்து இருக்கிறார்களாம்.
எவ்வளவு குறைப்பு
அவ்வளவு ஏன் இண்டிகோ முதன்மைச் செயல் அதிகாரியான ரனஜாய் தத்தாவுக்கே 25 % சம்பளம் குறைத்து இருக்கிறார்களாம். மூத்த துணைத் தலைவர்கள் (Sr Vice President) பதவிக்கு மேல் இருப்பவர்களுக்கு 20 சதவிகிதம் சம்பளம் குறைத்து இருக்கிறார்களாம். விமானிகளுக்கு (Pilot) 15 % சம்பளம் குறைத்து இருக்கிறார்களாம்.
எவ்வளவு குறைப்பு 2
மற்ற இண்டிகோ ஊழியர்கள், கேபின் குழுக்களில் பணியாற்றுபவர்களுக்கு எல்லாம் சுமாராக 5 - 10 சதவிகிதம் வரை, அவரவர்களின் பதவிக்கு தகுந்தாற் போல சம்பளத்தைக் குறைத்து இருக்கிறார்களாம். ஆக இண்டிகோ நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் இப்போது கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பார்கள் போலிருக்கிறது.
வருத்தம்
"ஒரு குடும்பத்துக்கு வரும் சம்பளத்தில் ஒரு பகுதி இழப்பது எவ்வளவு சிரமமானது என நாங்கள் அறிவோம். துரதிர்ஷ்டவசமாக, ஊழியர்கள் சில தியாகங்களைச் செய்யாமல், இண்டிகோ நிறுவனத்தை, இந்த நெருக்கடியான பொருளாதார காலங்களில் நடத்த முடியாது" எனச் சொல்லி இருக்கிறார் ரனஜாய் தத்தா.