கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த பின், எப்போது பார்த்தாலும் ஒரே நெகட்டிவ் செய்தி தான்.
இந்த கம்பெனியில் இருந்து இத்தனை பேரை லே ஆஃப் செய்துவிட்டார்கள். அந்த கம்பெனி ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளம் கட் என நம்மை பதட்டப்படுத்தியது.
ஆனால் இப்போது இண்டிகோ ஒரு நல்ல செய்தி சொல்லி நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி இருக்கிறது.
இண்டிகோ சம்பளம் கட்
கடந்த மார்ச் 2020-ல் கொரோனா பிரச்சனை தலை தூக்கும் போது, விமானங்கள் இயங்கக் கூடாது எனச் சொல்லத் தொடங்கினார்கள். அப்போது, முதல் ஆளாக வந்து, தன் ஊழியர்களுக்கு சம்பளம் 25 சதவிகிதம் வரை குறைப்பதாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்தது. உடனடியாக மற்ற இந்திய விமான சேவை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கத் தொடங்கினார்கள்.
யாருக்கு எவ்வளவு
மூத்த துணைத் தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு மேலான பதவிகளில் இருப்பவர்களுக்கு 20 சதவிகிதம், துணைத் தலைவர்கள் மற்றும் விமானிகளுக்கு 15 %, மற்ற பணியாளர்கள் (கேபின் குழு பணியாளர்களும் அடக்கம்) 5 - 10 சதவிகிதம் வரை சம்பளம் பிடிப்பதாகச் சொன்னார்கள்.
இண்டிகோ
இந்தியாவிலேயே நல்ல வலுவான விமான சேவை கம்பெனி என்றால் அது இண்டிகோ தான். அந்த அளவுக்கு பண பலம் பொருந்திய கம்பெனி இது. இந்தியாவின் மொத்த விமானப் பயணிகளில் சுமார் 45 சதவிகித விமானப் பயணிகளை இண்டிகோ தான் வைத்திருக்கிறது என்றால் இவர்கள் எவ்வளவு பெரிய டான் என்பது புரிய வரும். இருப்பினும் வியாபாரம் இல்லை என்றால் பணம் வராது தானே. ஆகியால் சம்பளத்தை பிடித்தம் செய்ய இருப்பதாகச் சொன்னது.
நோ கட்
ஆனால் இன்று, என்ன ஞானோதயம் வந்ததோ தெரியவில்லை, ஏப்ரல் 2020-க்கு இண்டிகோ ஊழியர்கள் முழு சம்பளம் பெறுவார்கள் எனச் சொல்லி, கொரோனா துன்பத்திலும், தன் ஊழியர்களுக்கு இன்பம் கொடுத்து இருக்கிறது. இருப்பினும், இண்டிகோ நிறுவனத்தில், உயர் பதவியில் இருப்பவர்கள் தாமாகவே முன் வந்து, தங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுத்து இருக்கிறார்களாம்.
வாழ்த்துக்கள்
ஏன் இண்டிகோ இப்படி திடீரென ஏப்ரல் மாதத்துக்கு சம்பளம் கொடுக்க ஒப்புக் கொண்டது என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். ஆனால் கையில் பணம் இருக்கும் போது, தங்களால் ஏப்ரல் மாதத்துக்கு முழு சம்பளத்தைக் கொடுக்க முடியும் என்றால், கொடுக்கிறார்களே அதற்கே இண்டிகோவை மனமாற பாராட்டலாம். வாழ்த்துக்கள் இண்டிகோ.