இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் பயணிகள் சேவை செய்து வரும் இண்டிகோ விமான நிறுவனத்தின் வருமானம் உயர்ந்தாலும், மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டு அறிக்கையில் இண்டிகோ நிறுவனம் 1,681.80 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் இண்டிகோ நிறுவனம் 1,147.200 கோடி நஷ்டத்தை பெற்றிருந்த நிலையில், இந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் இழப்பு அதிகரித்துள்ளதாக காலாண்டுஅறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூபாய் 6,361.80 கோடி மொத்த வருமானமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 29 சதவீதம் வருமானம் அதிகரித்து ரூ.8,207.50 கோடியாக வருமானம் உயர்ந்து உள்ளது.
எரிபொருள் செலவு
கடந்த ஆண்டின் இதே காலத்தை விட இந்த ஆண்டு வருமானம் அதிகமாக இருந்தபோதிலும் இந்த காலாண்டில் எரிபொருள் செலவுகள் 62.2 சதவீதம் அதிகரித்ததே இந்நிறுவனத்தின் நஷ்டத்திற்கு காரணம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொந்த விமானங்கள்
இண்டிகோ நிறுவன மொத்தம் 275 விமானங்களை இயக்கி வருகிறது. அதில் 261 விமானங்கள் குத்தகைக்கும், 14 விமானங்கள் சொந்தமாகவும் வைத்துள்ளது. இனி வருங்காலத்தில் இன்னும் விமானங்களை அதிகரிக்கவும் இண்டிகோ திட்டமிட்டுள்ளது.
கட்டண உயர்வு
எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து பயணிகள் கட்டணத்தையும் இண்டிகோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு பயணிகளிடம் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3.76 என கட்டணம் பெற்ற நிலையில் இந்த ஆண்டு பயணிகள் கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.4.24 என கட்டணமாக பெற்று வருகிறது. இருப்பினும் இண்டிகோ நிறுவனத்தின் நஷ்டத்தை தவிர்க்க முடியவில்லை என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது
லாபத்தை நோக்கி செல்லுமா?
இருப்பினும் தற்போது எரிபொருள் விலை குறையத் தொடங்கியுள்ளதால் அடுத்த காலாண்டில் இந்த நஷ்டத்தை குறைக்கவோ அல்லது லாபத்தை நோக்கி இண்டிகோ நிறுவனம் இயங்குவதற்கோ அதிக வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக நிலவரம்
உலகில் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்கள் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் எரிபொருள் விலை அதிகரித்தது தான் என விமான நிறுவனங்களை நடத்துபவர்களின் எண்ணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications