2020ல் வீழ்ந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க மத்திய அரசு பல்வேறு கட்டுமான திட்டங்களைக் கையில் எடுத்துள்ள இதேவேளையில் அனைவருக்கும் வீடு என்கிற மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை தொடர் வளர்ச்சிப் பாதையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வளர்ச்சி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது நாட்டின் முன்னணி பெயிண்ட் நிறுவனம்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம் ஐபிஓ திட்டத்தின் வாயிலாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட திட்டமிட்டு அதற்காகப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
இண்டிகோ பெயிண்ட்ஸ்
2020ல் இந்திய முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை அள்ளிக்கொடுத்த ஐபிஓ, 2021லும் பெரிய அளவில் முதலீட்டு வாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிட ஒப்புதல் பெற்றுக் காத்திருக்கும் நிலையில் தற்போது இண்டிகோ பெயிண்ட்ஸ் புதிதாக 1000 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டும் நோக்கில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
ஐபிஓ பங்கு விற்பனை
இந்தியப் பங்குச்சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாகக் களமிறங்கும் இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம் இந்த ஐபிஓ திட்டத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் புதிதாகவும், இந்நிறுவனத்தின் முதலீட்டு நிறுவனங்களான சிகோயா கேபிடல், எஸ்சிஐ இன்வெஸ்ட்மென்ட்ஸ் 4, எஸ்சிஐ இன்வெஸ்ட்மென்ட்ஸ் 3, மற்றும் இந்நிறுவனத்தின் தலைவரான ஹேமந்த் ஜலான் ஆகியோர் இணைந்து சுமார் 58,40,000 பங்குகளை விற்பனை செய்ய உள்ளனர்.
முதற்கட்ட ஒப்புதல்
இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம் நவம்பர் மாதம் ஐபிஓ-விற்காக முதற்கட்ட ஒப்புதல் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, இந்த விண்ணப்பம் டிசம்பர் 31ஆம் தேதி ஒப்புதல் பெற்றுத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டுத் தொழிற்சாலை
இப்புதிய பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைத் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பெயிண்ட் உற்பத்தி தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யவும், பல புதிய இயந்திரங்களை வாங்கவும், நிலுவையில் உள்ள பேமெண்ட் மற்றும் கடன்களைச் செலுத்தவும் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இண்டிகோ பெயிண்ட்ஸ் தலைமையிடம்
புனே நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நாடு முழுவதும் வர்த்தகம் செய்யும் இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனம், ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 3 தொழிற்சாலைகளை வைத்துள்ளது. இதில் தற்போது தமிழ்நாட்டுத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யப் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.