விமானப் போக்குவரத்து மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இத்துறையில் ஒரு நிறுவனம் லாபகரமாக இயங்குவது என்பது சாதாரணக் காரியமில்லை.
அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விமானப் போக்குவரத்துத் துறையில் தாக்குப்பிடிப்பது என்பது மிகவும் கடினம்.
விமானப் போக்குவரத்துத் துறை
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பல நிறுவனங்கள் வந்தாலும், சில நிறுவனங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கிறது. உதாரணமாகக் கிங்பிஷ்ர், ஏர் டெக்கான், தற்காலிகமாக முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ், அதீத கடனில் தவிக்கும் ஏர் இந்தியா இப்படிப் பல உள்ளது.
ஆனால் ஒரு நிறுவனம் 2 வருடத்தில் 10000 கோடி ரூபாயை இழந்தும் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இண்டிகோ ஏர்லையன்ஸ்
இந்தியாவின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லையன்ஸ்-ன் தாய் நிறுவனமான இண்டர்குளோப் ஏவியேஷன் ஜூன் காலாண்டில் முடிவுகள் வெளியிட்டதில் ஒரு நாளுக்கு 35 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டதாகவும், இது கடந்த 6 காலாண்டில் 10,000 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக் காரணமாக இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 2வது கொரோனா அலையில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மட்டும் அல்லாமல் கடன் அளவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜூன் காலாண்டு
ஜூன் காலாண்டு முடிவில் இந்நிறுவனத்தின் மொத்த கடன் அளவு 31,690 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 22.5 சதவீதம் அதிகமாகும். இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் தனது விமானச் சேவைக்காகப் பல விமானங்களைக் குத்தகைக்காக எடுத்துள்ளது. இதற்கான தொகையும் இதன் கடன் நிலுவையில் சேர்க்கப்பட்டு உள்ளது.
கொரோனா 3ஆம் அலை
இந்தியாவின் மக்கள் கொரோனா தொற்றுக் காரணமாக இன்னமும் வெளியில் பயணம் செய்யப் பயந்து வரும் நிலையில், நாடு முழுவதும் 3ஆம் அலை உருவாகியுள்ளது. இதனால் 2022ஆம் நிதியாண்டு முழுவதும் இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே பதிவு செய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இண்டர்குளோப் ஏவியேஷன் பலம்
ஆனால் இந்தியாவின் பிற விமானச் சேவை நிறுவனங்களை விடவும் இண்டர்குளோப் ஏவியேஷன் ஒரு படி மேல். எப்படித் தெரியுமா..?
இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் கடன் மற்றும் நிலுவைத் தொகை அளவு 31,690 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தாலும், இந்நிறுவனத்தின் கையில் சுமார் 17,067.9 கோடி ரூபாய் வைத்துள்ளது. இதில் 5,620.7 கோடி ரூபாய் ஃப்ரீ கேஷ். கடந்த ஒரு வருடத்தில் கையில் இருக்கும் பணத்தின் அளவு 7 சதவீதம் குறைந்திருந்தாலும், இது பெரிய விஷயமில்லை.
QIP முதலீடு
இதேவேளையில் இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் 3000 கோடி ரூபாய் அளவிலான QIP திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் கணக்கு மிகப்பெரிய பலத்தைச் சேர்க்கும் என்றால் மிகையில்லை.
அதிக வாய்ப்பு
மேலும் இந்தியாவில் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் போது மிகப்பெரிய அளவிலான லாபத்தை அடையப்போது முதலில் இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் தான். இந்திய மக்கள் மத்தியில் ஏற்கனவே அதிகளவிலான நம்பிக்கையைப் பெற்றுள்ள நிலையில் விமானப் பயணிகள் கட்டாயம் இண்டிகோ பிராண்டை தான் தேர்வு செய்வார்கள்.


Click it and Unblock the Notifications