இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே. பல நாடுகளையும் ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க, பல நாடுகள் பாதுகாப்பை காரணம் காட்டி விமான போக்குவரத்தினை ரத்து செய்துள்ளன.
சுமார் 3,000 பேருக்கு மேல் காவு வாங்கியுள்ள கொரோனவால், இதுவரை 88,000 பேர் தாக்கம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனாவில் ஒரளவுக்கு இதன் தாக்கம் குறைந்துள்ளதாக சந்தோஷப்படும் அதே வேலையில், தற்போது சுமார் 66 நாடுகளுக்கு கொரோனா படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதாரத்திலும் தாக்கம்
ஒரு நாட்டினை கொரோனா ஆட்டிப்படைத்ததற்கே பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில், தற்போது 66 நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. கொரோனாவின் அச்சத்தால் பற்பல நாடுகள் நடக்க இருந்த மாநாடுகள், முக்கிய கூட்டங்கள் என பலவற்றையும் ரத்து செய்துள்ளன.
போக்குவரத்து பாதிப்பு
இது இப்படி எனில் மறுபுறம் பல நாடுகளின் முக்கிய நகரங்களில் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு பல நாட்டின் அரசுகள் அறிவித்துள்ளன. இதனால் மக்கள் வீட்டோடு முடங்கியுள்ளனர். குறிப்பாக சொல்லவேண்டுமானால், ஏன் நாட்டின் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி குறைந்த நபர்களை அனுமதிக்கின்றன. இதனால் முதலில் பாதிக்கப்படுவது போக்குவரத்து துறையே. அதிலும் இந்த கொரோனா வான் வழியே அதிகம் பரவுவதாக கூறப்படும் நிலையில் விமான போக்குவரத்துகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
விமான ஆப்ரேட்டர்கள் பாதிக்கலாம்
நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், இது விரைவில் மற்ற நாடுகளிலும் பயண கட்டுப்பாடுகளை கொண்டு வர வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். இதனால் விமானத்துறை வெகுவாக பாதிக்கப்படக்கூடும். குறிப்பாக ஆப்ரேட்டர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இண்டிகோ பாதிக்கும்
அதிலும் குறிப்பாக ஆசிய பசிபிக் விமான ஆப்ரேட்டர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டர்குளோப் ஏவியேஷன் ஏற்கனவே பெருத்த அடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆக இந்த நிறுவனத்தின் பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது பெரிய ஆச்சரியப்படும் விஷயம் அல்ல.
பங்குகள் வீழ்ச்சி
அதிலும் கடந்த வெள்ளகிழமையன்று மட்டும் 11% வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் வைரஸ் குறித்தான தாக்கம் நிதிச் சந்தைகளிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்று கூறலாம். இண்டிகோவை பொறுத்த வரையில் சர்வதேச போர்ட்ஃபோலியோவில் தொடர்ந்து நன்கு வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால் கொரோனா தொடர்ந்து வளர வளர இண்டிகோவின் வணிகம் சுருங்கி கொண்டே வருகிறது. சொல்லப்போனால் ஒர் அறிக்கையில் இண்டிகோவின் சர்வதேச விமான பயண பங்கு 19% உள்ளதாக கூறப்படுகிறது. ஆக அந்தளவு தாக்கம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச வணிகம் மூலம் வருவாய் வளர்ச்சி
சமீபத்தில் இண்டிகோவின் வருவாய் சர்வதேச பயணங்களின் மூலம் கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளது. அதன் டிசம்பர் காலாண்டில் அதன் சர்வதேச பயணம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், ஆக அது எங்களுக்கு பிரகாசமான வழியாகும் என்றும் இண்டிகோ கூறியிருந்தது. ஆனால் தற்போது அவை அப்படியே தலைகீழாக மாறிவிட்டன.
மற்ற செலவினங்களும் அதிகரிப்பு
தற்போது இது மட்டும் பயம் அல்ல, இண்டர்குளோப் முதலீட்டாளார்களுக்கு இன்னும் பல கவலைகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் தனது 52 வார உச்சத்தினை தொட்டது இதன் பங்குகள். ஆனால் அதிகபட்சமாக அதன் லாபகரமான உயரமாக கருதப்பட்டது அது தான். ஏனெனில் ஜெட் ஏர்வேஸின் நன்மைகளை அதுவரை கிடைத்து வந்த நிலையில் அவை அதன் பின் குறைந்துவிட்டது. இந்த நிலையில் இதன் பங்கி விலை அதன் பின்பு 31% வீழ்ச்சி கண்டுள்ளது.
சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உற்சாகம் இல்லை
உண்மையாக சொல்லப்போனால் செயல்பாட்டு ரீதியாக அவ்வளவாக உற்சாகம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது இண்டிகோ. ஏனெனில் கடந்த இரண்டு காலாண்டுகளிலும் எதிர்பார்த்ததைவிட இயந்திர சிக்கல் மற்றும் பராமரிப்பு செலவுகள் முன்பை விட அதிகம். இது எங்கள் லாபத்தை கொள்ளை அடித்து விட்டது என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.
கட்டணங்கள் குறைவு
மேலும் நிறுவனத்தின் பல தெளிபடுத்தல்கள் இருந்தபோதிலும் பெரு நிறுவன நிர்வாகம் தொடர்பான பல கவலைகள் எங்களை விட்டு நீங்கவில்லை. துரதிஷ்டவசமாக எங்கள் அவுட்லுக் பிரகாசமாக இல்லை. ஜே.எம் பைனான்ஷியல் அறிக்கையின் படி, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் சராசரி கட்டண விகிதமானது கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 20% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது வருவாய் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இப்படியாக பல கலவைகள் இண்டிகோவின் வருவாயை பாதிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதனால் இண்டிகோவின் பங்கு விலையும் சரிந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று இண்டிகோ பங்கின் விலை 2.37% அதிகரித்து 1,333 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.