இந்திய மக்களின் முக்கிய உணவு பொருளாக விளங்கும் பாமாயில் ஏற்றுமதியை இந்தோனேசிய அரசு தடை செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இந்திய மக்கள் அவசர அவசரமாக அதிகளவிலான பாமாயிலை வாங்கிக் குவிக்கத் துவங்கினர்.
அதிகப்படியான டிமாண்ட் காரணமாக ரீடைல் சந்தையில் சமையல் எண்ணெய் விலை கடந்த 3 நாட்களில் அதிகளவில் உயர்ந்தது. இந்நிலையில் இந்தோனேசியா அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
சமையல் எண்ணெய்
இந்தியாவில் பயன்படுத்தும் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய்யில் 40 சதவீதம் பாமாயில், இதில் 60 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக இந்தியா பாமாயிலை அதிகளவில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்தோனேசியாவில் தடை உத்தரவு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இந்தோனேசிய அதிபர்
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் பாமாயிலின் உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான எண்ணெய் தன்நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 28 முதல் பாமாயில் ஏற்றுமதியை மொத்தமாகத் தடை செய்ய உள்ளதாக அறிவித்தார்.
பாமாயில்
இந்த அறிவிப்பு இந்தியாவையும், இந்திய சந்தையையும், இந்திய மக்களையும் அதிகளவில் பாதித்த நிலையில், தற்போது இந்தோனேசிய அரசு முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பில் refined, bleached மற்றும் deodorized (RBD) பாமாயில் மீது மட்டுமே ஏற்றுமதி தடை இருக்கும், சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஏற்றுமதிக்கு எவ்விதமான தடையும் இருக்காது என அறிவித்துள்ளது.
சுத்திகரிக்கப்படாத பாமாயில்
இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் இந்தோனேசியாவில் எப்போதும் போலேவே எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் சுத்திகரிக்கப்படாத பாமாயிலை இறக்குமதி செய்யலாம், ஆனால் சுத்திகரிப்புப் பணிகள் அதிகமாகும். இதனால் பாமாயில் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திருத்தப்பட்ட பாமாயில் தடை ஏப்ரல் 28ஆம் தேதி நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போர்
ஏற்கனவே உக்ரைன் போர் காரணமாகச் சமையல் எண்ணெய் விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தோனேசியாவின் அறிவிப்பும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் தற்போது முக்கியமான பிரச்சனை குறைந்துள்ளது.
அதானி வில்மார்
இதேவேளையில் இந்தியாவில் சிங்கப்பூர் வில்மார் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் விற்பனை செய்யும் அதானி வில்மார் குறைத்த விலையில் எண்ணெய் விற்பனை செய்து அதிகளவிலான வர்த்தகச் சந்தையைப் பெற உள்ளது. இதன் வாயிலாக இன்று அதானி வில்மார் நிறுவனத்தைச் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டது.