உலகின் மிகப்பெரிய பாமாயில் ஏற்றுமதி நாடான இந்தோனேசியா எடுத்துள்ள முக்கியமான முடிவால் இந்தியாவில் முக்கியச் சமையல் பொருட்களில் ஒன்றான பாமாயில் விலை தாறுமாறாக உயர உள்ளது.
தன் நாட்டின் நலனுக்காக இந்தோனேசியா மீண்டும் தனது முடிவை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசிய அதிபர்
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ கடந்த வார வெள்ளிக்கிழமை பாமாயிலின் உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான எண்ணெய் தன்நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 28 முதல் பாமாயில் ஏற்றுமதியை மொத்தமாகத் தடை செய்ய உள்ளதாக அறிவித்தார். ஆனால் அடுத்த 2 நாட்களில் சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஏற்றுமதிக்கு எவ்விதமான தடையும் இருக்காது என இந்தோனேசிய அரசு விளக்கம் கொடுத்தது.
முடிவு மாற்றம்
இந்நிலையில் இன்று மீண்டும் தனது முடிவை மாற்றியுள்ளது இந்தோனேசிய அரசு, உள்நாட்டு விலை உயர்வு தனியும் வரையில் சமையல் எண்ணெய் உற்பத்திக்கான மூலப்பொருட்கள், சுத்திகரிக்கப்படாத மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டுத் தலைமை பொருளாதார விவகார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்
இந்தோனேசிய அரசின் இந்த முடிவின் மாற்றத்திற்கு முக்கியக் காரணம் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவிப்பும், மக்கள் மற்றும் அரசு அமைப்புகளின் கருத்துக்களைக் கேட்ட பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என இந்தோனேசியா பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் ஏர்லாங்கா ஹார்டார்டோ விளக்கம் கொடுத்துள்ளார்.
சமையல் எண்ணெய்
இந்தியாவில் பயன்படுத்தும் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய்யில் 40 சதவீதம் பாமாயில், இதில் 60 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக இந்தியா பாமாயிலை அதிகளவில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்தோனேசியாவில் தடை உத்தரவில் ஏற்பட்ட மாற்றம் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இந்தியாவுக்குப் பாதிப்பு
இந்தத் தடை இன்று முதல் அமலாக்கம் செய்யப்படும் நிலையில் இந்தியாவில் சமையில் எண்ணெய் ஏற்கனவே அதிகமாக இருக்கும் நிலையில், கூடுதலாக அதிகரிக்க உள்ளது. இது இந்திய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.