சில நாட்களுக்கு முன்பு ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் 75 சதவீத வேலைவாய்ப்பை ஆந்திர மக்களுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில அரசும் இதேபோன்று அதிகளவிலான வேலைவாய்ப்புகளைத் தன் மாநில மக்களுக்கு வழங்க வேண்டும் என்கிற சட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இதற்குச் சில தரப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் சில தரப்பு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்விரு மாநிலத்தின் முடிவுகளால் தென்னிந்தியாவில் மொத்த உற்பத்தி துறையும் குழப்பத்தில் உள்ளது.
உற்பத்தி துறை
பொதுவாக உற்பத்தி துறையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் அதிகளவிலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று வரையில் நிறுவனங்கள் திறன் அடிப்படையில் தான் பணியில் அமர்த்தி வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடக மாநில அரசு குறைந்தபட்சம் 75 சதவீத வேலைவாய்ப்புகளைச் சொந்த மாநில மக்களுக்குத் தான் கொடுக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இதனால் உற்பத்தி ஊழியர்களை எப்படிப் பணியில் அமர்த்துவது, திறன் பற்றாக்குறை இருந்தால் என்ன செய்வது எனக் குழப்பத்தில் இருக்கிறது தென்னிந்திய உற்பத்தி துறை.
4 மாநிலங்கள்
ஆந்திர மற்றும் கர்நாடகாவில் இப்புதிய விதி மாற்றத்தை அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு, கேரளாவும் இதுபோன்ற முடிவு அறிவிக்கும் என அனைத்து துறையினரும் எதிர்பார்த்து வருகின்றனர், அதிலும் தமிழ்நாட்டில் மிக முக்கியம். இதற்கு முக்கியக் காரணம் தமிழ்நாட்டில் தொழிற்சாலை எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
மாநில எல்லைகள்
தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் ஸ்ரீ சிட்டி சிறப்புத் தொழிற்பேட்டை, தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் ஓசூர் மற்றும் பிடதி என 3 மாநில எல்லையிலும் 3 மாநில மக்கள் அதிகளவில் பணியாற்றி வரும் நிலையில் இப்புதிய விதி நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீசிட்டி பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகள் பெரும்பாலும் திறன் அடிப்படையில் தமிழ்நாடு மக்களைத் தான் அதிகளவில் ஊழியர்களாக நியமித்து உள்ளனர்.
பிஜேபி
ஆந்திர மாநிலத்தில் விதிக்கப்பட்டு உள்ள விதிமுறையை பிஜேபி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , ஆந்திர மாநிலத்தின் தொழிற்துறை மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்புத் தலைமை செயலாளர் ராஜத் கூறுகையில், ஆந்திராவில் ஏற்கனவே இந்த விதிமுறை இருந்தது. தற்போதைய அரசு இதை விரிவாக்கம் மட்டும் தான் செய்கிறது எனத் தெரிவித்தார்.
மற்ற மாநிலங்கள்
ஆந்திரா, கர்நாடகாவில் மட்டும் தான் இதுபோன்ற விதிமுறைகள் உள்ளதா என்றால் நிச்சயம் இல்லை. ஏற்கனவே மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் இருக்கும் தொழிற்சாலையில் சுமார் 80 சதவீத வேலைவாய்ப்புகள் தன் மாநில மக்களுக்கும், உள்ளூர் அல்லது அப்பகுதி மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என விதிமுறை உள்ளது.
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற விதிமுறை வந்தால் எப்படியிருக்கும்..? என்ன பாதிப்பு ஏற்படும்..? பதிலை கமெண்ட் பதிவிடம் இடத்தில் தெரிவிக்கவும்.