2019ஆம் ஆண்டு இந்தியாவிற்குப் போராட்டம் நிறைந்த ஆண்டு என்றால் மிகையில்லை, ஆனால் 2020வும் பல வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளுடனே துவங்கியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் வர்த்தகப் பிரச்சனை, வேலைவாய்ப்புப் பிரச்சனை, பொருளாதார வளர்ச்சி பிரச்சனை ஆகியவற்றுடன் எதிர்வரும் சர்வதேச வர்த்தகப் பிரச்சனை ஆகியவற்றைச் சமாளிக்கும் அளவிற்கு ஒரு சிறப்பான பட்ஜெட்-ஐ மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு தயாரித்து வருகிறது.
இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பிரச்சனை பணவீக்கம்.
சில்லறை பணவீக்கம்
நாட்டின் சில்லறை பணவீக்கம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இக்காலகட்டத்தில் தாறுமாறாக உயர்ந்த உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் தான். core inflation எனக் கூறப்படும் பணவீக்கம் நவம்பர் மாத்தை ஒப்பிடுகையில் சற்று உயர்ந்து 3.7 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது.
உணவு பணவீக்கம்
டிசம்பர் மாதத்தில் நாட்டின் உணவு பணவீக்கம் 14.12 சதவீதம் உயர்ந்து மக்களை வாட்டிவதைத்தது. இதேகாலகட்டத்தில் 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் -2.65 சதவீதமாக இருந்தது. 2019ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 10.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி
ஜூலை 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்த பணவீக்க அளவான 2-6 சதவீத இலக்கை முதல் முறையாகச் சில்லறை பணவீக்க அளவீடு தாண்டியுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அளவை தாண்டியுள்ளது பொருளாதார வளர்ச்சிக்குச் சுமையாக உள்ளது.
மேலும் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கையை மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெங்காய விலை
சில்லறை பணவீக்கம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விடவும் அதிகமாக உயர்ந்துள்ளது, இதற்கு முக்கியக் காரணம் வெங்காயம். இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் முக்கியமானவை வெங்காயம், டிசம்பர் மாதத்தில் வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் அதிகளவில் உயர்ந்த நிலையில் உணவு பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
பட்ஜெட்
2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில் அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி ரிசர்வ் வங்கி தனது இரு மாத நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளது. இக்கூட்டத்தில் தற்போது இலக்கை விட அதிகமாக உயர்ந்திருக்கும் பணவீக்கத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.