இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு அதிகமானோர் கொரோனா தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பு ஊசியைப் போட்டுகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான இன்போசிஸ், அக்சென்சர், இந்தியாவில் இருக்கும் தனது ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பு மருந்து செலவுகளை நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது.
இந்தக் கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ளத் தடுப்பு மருந்தை 2 முறை பெற்ற கொள்ள வேண்டும். இந்த விதிமுறை இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும் கொரோனா தடுப்பு மருந்தை அரசு மருத்துவமனை இலவசமாக அளிக்கும் நிலையில் தனியார் மருத்துவமனையில் ஒரு டோஸ் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே 2 முறை பெறுவதற்கு 500 ரூபாய் வரையில் செலவாகும்.
இந்நிலையில் இன்போசிஸ் தனது ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து அளிக்க வேண்டும் என்பதற்காகத் தனிப்பட்ட முறையில் மருத்து அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரவின் ராவ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அக்சென்சர் நிறுவனமும் தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான கொரோனா தடுப்பு மருந்து தொகையை நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.