இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்தக் காலாண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் சக ஐடி நிறுவனங்களைக் காட்டிலும் அதிகப்படியான வருவாய் வளர்ச்சியை எதிர் கொண்டாலும் முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த அட்ரிஷன் விகிதம் மார்ச் காலாண்டைக் காட்டிலும் ஜூன் காலாண்டில் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் வரலாற்று உச்சத்தைப் பதவி செய்துள்ளது.
இன்போசிஸ்
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் 2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டின் முடிவுகளை ஜூலை 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு உள்ளது. ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான திட்டங்களைப் பெற்ற நிலையில் ஊழியர்கள் தேவை அதிகமாக இருக்கிறது.
ரெசிஷன் அச்சம்
ஆனால் ரெசிஷன் அச்சத்தால் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக அனைத்து நிறுவனங்களும் குறைத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இன்போசிஸ் ஜூன் 30 உடன் முடிந்த 2023 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிதாக 21,171 ஊழியர்களைப் பணியில் சேர்த்து உள்ளது.
3,35,186 ஊழியர்கள்
இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை ஏப்ரல் காலாண்டில் 3,14,015 ஆக இருந்த நிலையில் ஜூன் காலாண்டில் 3,35,186 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால் அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ளது.
அட்ரிஷன் விகிதம்
இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் ஏப்ரல் மாதத்தில் 27.7 சதவீதமாக இருந்த நிலையில் புதிதாக ஜூன் காலாண்டில் 21,000 பேருக்கும் அதிகமான ஊழியர்களையும் பணியில் சேர்த்துள்ள நிலையிலும் ஜூன் காலாண்டில் அட்ரிஷன் விகிதம் 28.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வரலாற்று உச்சம்
இந்த ஜூன் காலாண்டின் 28.4 சதவீதம் அட்ரிஷன் விகிதம் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இது டிசம்பர் காலாண்டில் 25.5 சதவீதமாகவும், செப்டம்பர் காலாண்டில் 20.1 சதவீதமாகவும், ஜூன் காலாண்டில் 13.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரஷ்ஷர்கள்
ஐடி நிறுவனங்கள் பல வருடமாகப் பிரஷ்ஷர்களுக்குச் சம்பளம் உயர்த்தாமல் ஆட்டம் காட்டிய நிலையில், இந்த வருடம் தான் அதிகப்படியான டிமாண்ட் காரணமாகப் பிரஷ்ஷர்களின் சம்பளத்தை உயர்த்தியது. இதன் மூலம் முன்னணி கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்ற பட்டதாரிகளைச் சேர்க்க முடியும் என்பது ஐடி நிறுவனங்களின் திட்டம்.
சம்பள உயர்வு, பதவி உயர்வு
இதேபோல் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் சராசரியாக 5-7 சதவீதம் மட்டுமே சம்பள உயர்வாக அளித்து வந்த நிலையில், தற்போது அதிகப்படியான சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றைக் கொடுக்கத் துவங்கியுள்ளது. இவை அனைத்தும் தற்போது இருக்கும் ஊழியர்களைத் தக்க வைப்பதற்கான முயற்சி.