இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தொடர்ந்து திறன் மிக்க ஐடி ஊழியர்களை, தனது ஊழியர் குழுமத்தில் சேர்த்து வருவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நீல்கேனி, இந்தியாவில் 19,230 பட்டதாரிகளையும், நாட்டிற்கு வெளியே 1,941 பேரையும் பணியமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 40வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய நந்தன் நீல்கேனி, வாடிக்கையாளர்களின் தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்ய, நிறுவனம் தொடர்ந்து திறன் மிகுந்தவர்களை பணியமர்த்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் அதிரடி திட்டம்
கொரோனாவுக்கு பிறகு தொடர்ந்து டிஜிட்டல் வளர்ச்சியானது இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் அதிகரித்து வரும் நிலையில், இன்ஃபோசிஸ் தொடர்ந்து தனது பணியமர்த்தலை முடுக்கி வருகின்றது. அதோடு இந்தியாவுக்கு வெளியில், குறிப்பாக அமெரிக்காவில் 2022ம் ஆண்டில் 25000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கனடாவிலும் விரிவாக்கம்
இது தவிர கனடாவின் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் நிலையில், 2023ம் ஆண்டில் எங்களது ஊழியர் தொகுப்பினை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம். இதே இங்கிலாந்தில் தொற்று நோய்க்கு பிறகு 1000 வேலைகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக நீல்கேனி கூறியுள்ளார்.
அதிகரிக்கும் டிஜிட்டல் மாற்றம்
கொரோனாவினால் ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மாற்றமானது ஐடி துறைக்கு பல புதிய ஒப்பந்தங்களை கொடுத்துள்ளதோடு, ஐடி நிறுவனங்களை டிஜிட்டல் சேவைகளுக்கு மாற வழிவகுத்துள்ளது. பல நிறுவனங்களும் டிஜிட்டல் டெக்னாலஜிக்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன. இது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் 30% அதிகரித்துள்ளதாக நாஸ்காம் சமீபத்திய அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை நிரூபிக்கும் விதமாக இன்ஃபோசிஸின் அறிக்கையும் வந்துள்ளது.
கொரோனா நிவாரணம்
இன்ஃபோசிஸ் கடந்த ஆண்டில் நல்ல வளர்ச்சியினை கண்ட நிலையில், புதிய ஒப்பந்தங்களின் மதிப்பானது 14.1 பில்லியன் டாலர் மதிப்பில் போடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 66% அதிகமாகும். இதற்கிடையில் கொரோனா நிவாரண நிதி பற்றி பேசியவர், நிறுவனம் கொரோனா உதவித் தொகையாக 200 கோடி ரூபாயினை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார்.