பேய் பிசாசை எல்லாம் பார்த்தால் கூட பயப்படாத நம் மக்கள், இன்று கண்ணுக்கே தெரியாத கொரோனாவுக்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதுவரை என்ன மாற்று மருந்துகள் இருக்கிறது. இந்த கொரோனா பாதித்தால் முழுமையாக காப்பாற்றி விட முடியுமா..? என பல கேள்விகளுக்கு விடை கண்டு பிடிக்க விஞ்ஞானிகள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த சூழலில் ஒரு மனிதர் "கொரோனா வைரஸ பரப்புங்க" என தன் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு சிக்கலில் மாட்டி இருக்கிறார்.
ஃபேஸ்புக் போஸ்ட்
கர்நாடகா மாநிலத்தின் தலை நகரான பெங்களூரைச் சேர்ந்த முஜிப் முஹம்மத் என்பவர், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் "எல்லோரும் கரம் கோர்ப்போம். வெளியே செல்வோம். வாயை மூடாமல் தும்முவோம். கொரோனா வைரஸைப் பரப்புவோம்" என போஸ்ட் செய்து இருந்தார். அவ்வளவு தான் பிரச்சனை பற்றிக் கொண்டது
வழக்கு
பொது வெளியில், பொது மக்களுக்கு பயம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்கு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505-ன் கீழ் பெங்களூர் நகர காவலர்கள் வழக்கு பதிவு செய்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் பெங்களூர் நகர இணை ஆணையர் சந்தீப் பாட்டில். மேற்கொண்டு விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.
வேலை
நம் முஜிப் முஹம்மத், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தான் வேலை பார்த்து வருகிறாராம். நேற்று மார்ச் 27, 2020, வெள்ளிக் கிழமை, இன்ஃபோசிஸ் நிறுவனம் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் "இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் ஒருவர், சமூக வலைதளத்தில் செய்த போஸ்டை விசாரித்துவிட்டோம். இப்படி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நடத்தை விதிகளுக்கு எதிரானது" எனச் சொல்லி இருந்தது.
வேலை நீக்கம்
மேலும் "இப்படி இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் நடந்து கொண்டதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அந்த ஊழியரை வேலையில் இருந்து நீக்குகிறோம்" எனச் சொல்லி இருக்கிறது இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கருத்தை பார்க்க க்ளிக் செய்யவும்:
தேவையா
நாம் முஜிப் முஹம்மதைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி தான் கேட்கத் தோன்றுகிறது. இதெல்லாம் தேவை தானா..? ஏற்கனவே மக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க அரசு 21 நாள் ஷட் டவுன் எல்லாம் அறிவித்து இருக்கிறது. இந்த மாதிரியான சூழலில் கூட அரசுக்கு உதவவில்லை என்றால் எப்படி சார்..?