இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் சிறப்பான மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக லாபம் மற்றும் வருவாயில் டிசிஎஸ் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் 2 வருடத்திற்கும் அதிகமாக வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் முடிவை எடுத்துள்ள இன்போசிஸ் 3 கட்டதிட்டத்தை அறிவித்துள்ளது.
டிசிஸ் முதல் அறிவிப்பு
டிசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு சுமார் 50000 உயர்மட்ட அதிகாரிகளை மட்டும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த 50000 ஊழியர்களை ஏப்ரல் மாதத்தில் இருந்தே அழைக்கப்படும் எனவும் டிசிஎஸ் உறுதி அளித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனமும் தனது ஊழியர்களை அழைக்க 3 கட்ட திட்டத்தை அறிவித்துள்ளது.
இன்போசிஸ் 3 கட்ட திட்டம்
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான நிலஞ்சன் ராய் கூறுகையில், தற்போது 95 சதவீத இன்போசிஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகிறார்கள். அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைப்பது உறுதி, ஆனால் பகுதி பகுதியாக அழைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக 3 கட்ட திட்டத்தையும் இன்போசிஸ் நிர்வாகம் உருவாக்கியுள்ளது என நிலஞ்சன் ராய் தெரிவித்தார்.
முதல் கட்டம்
இன்போசிஸ் அலுவலகம் இருக்கும் பகுதிகளில் மற்றும் பக்கத்து ஊர்களில் இருக்கும் ஊழியர்களை முதல் கட்டமாக அலுவலகத்திற்கு அழைக்க உள்ளோம். இந்தப் பிரிவில் இருக்கும் ஊழியர்களை வாரத்திற்கு இரு முறையாவது அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்திருப்பது முக்கியமானது.
இரண்டாம் கட்டம்
2வது கட்டமாக இன்போசிஸ் அலுவலகம் இல்லாத பகுதிகளில் இருக்கும் ஊழியர்கள், அதாவது சொந்த ஊரில் இருக்கும் ஊழியர்களை அடுத்த சில மாதத்தில் அலுவலகத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அடுத்த 1 அல்லது 2 மாதத்தில் இப்பிரிவு ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள்
ஹைப்பிரிட் மாடல்
3வது கட்டமாக வாடிக்கையாளர்கள், வேலை திறன், அணியின் முடிவு ஆகியவற்றைக் கணக்கிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஹைப்பிரிட் மாடல் நிறுவனத்தில் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரியான நிலஞ்சன் ராய்க் கூறியுள்ளார்.