ஐடி கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு, எப்போது தங்கள் வேலை பறி போகும் என்கிற பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆக இந்த லே ஆஃப் எல்லாம் சகஜமானதே.
ஆனால் இப்படி ஆயிரக் கணக்கான பேரை ஒரே நேரத்தில் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்புவது எல்லாம் கொடூரத்திலும் கொடூரம். இப்போது அப்படி ஒரு கோர சம்பவம் தான், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நடக்க இருக்கிறது.
சமீபத்தில் தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின், கணக்கு வழக்குகளில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எல்லாம் எழுந்தது. அந்த புகார்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனவும் சமீபத்தில் சொல்லி இருந்தது இன்ஃபோசிஸ். இப்போது ஆயிரக் கணக்கான பேரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
எத்தனை பேர்
மூத்த மேலாளர்களாக பணியாற்றும் படி நிலை 6-ல் இருக்கும் ஊழியர்களில் 10 சதவிகித ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். சம்பளப் படி நிலை 6, 7 மற்றும் 8-ல் சுமாராக 30,000 பேர் வேலை பார்க்கிறார்கள். சுமாராக 2,200 பேர் வரை தங்கள் வேலையை இழக்கலாம் என நியூஸ் 18 செய்தி வெளியிட்டு இருக்கிறது.
மற்ற படி நிலைகள்
சம்பள படி நிலை 6, 7, 8-ல் பலரை வேலையை விட்டு நீக்குவது போக, சம்பள படி நிலை 4 மற்றும் 5-ல் இருந்தும் பல மூத்த அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். இந்த எண்ணிக்கை சுமார் 10,000 பேரைத் தொடலாம் என்கிறது நியூஸ் 18 நிறுவனத்தின் ஆங்கில செய்திகள்.
உயர் அதிகாரிகள்
கீழ் நிலை மற்றும் இடை நிலை ஊழியர்கள் போக, 50 பெரிய பதவியில் இருக்கும் அதிகாரிகளும், தங்கள் வேலையை விட்டு நீக்கப்பட இருக்கிறார்களாம். இவர்கள் எல்லாம் உதவித் துணைத் தலைவர், துணைத் தலைவர் போன்ற பெரிய பதவிகளில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு விலை
"வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்புவது ஒரு சாதாரண விஷயம் தான். நன்றாக செயல்படும் நிறுவனத்தில் இவைகள் எல்லாம் அவசியமாகிறது" எனச் சொல்கிறது இன்ஃபோசிஸ் தரப்பு. இந்த செய்தி வெளியான பின் இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை சுமார் 1.9 சதவிகிதம் வரை சரிந்து இருக்கிறது. இன்று 695 ரூபாய்க்கு இன்ஃபோசிஸ் பங்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.