பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிதாமகர் வீட்டு வாரிசுக்கு கல்யாணம்.
இன்ஃபோசிஸ் என்றால் யார் பெயர் முதலில் நினைவுக்கு வரும்... நாராயண மூர்த்தி. அவரின் மகன் ரோஹன் மூர்த்திக்கு தான் இப்போது திருமணம்.

இதில் கவனித்து வரவேற்க வேண்டிய முக்கிய விஷயம், நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி இரண்டாவது முறையாக திருமணம் செய்ய இருக்கிறார். வாழ்த்துக்கள் ரோஹன் மூர்த்தி.
ரோஹன் மூர்த்திக்கு கடந்த 2011-ம் ஆண்டு, இந்தியாவின் முக்கிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேனு ஸ்ரீநிவாசன் அவர்களின் மகள் லட்சுமியுடன் திருமணம் நடந்தது.
கடந்த 2015-ல் இருவருமே விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு தான் அபர்னாவைச் சந்தித்து இருக்கிறார். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் அபர்னா.
அபர்னாவின், தந்தை கிருஷ்ணன், ஒரு முன்னாள் இந்திய கப்பற் படை அதிகாரி. அபர்னாவின் தாய் சாவித்ரி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரியாக பணியாற்றியவர். இவர்களின் குடும்பமே தற்போது கேரளாவில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களாம்.
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் தான் அபர்னாவும் ரோஹனும் சந்தித்துக் கொண்டார்களாம். அப்படியே நட்பு தொடர்ந்து இருக்கிறது. அவ்வப் போது சந்தித்துப் பேசவும் தொடங்கி இருக்கிறார்களாம். அப்படி தொடங்கிய சந்திப்பு இன்று திருமணத்தில் வந்து சுபமாக முடிந்து இருக்கிறது.
இன்ஃபோசிஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய முக்கிய நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகனான ரோஹன் மூர்த்தி கையில், ஒரு கணிசமான எண்ணிக்கையில் இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் இருக்கிறதாம்.
ரோஹன் மூர்த்தியின் சொத்து மதிப்பு மட்டும் (இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளையும் சேர்த்து) சுமாராக 500 மில்லியன் டாலர் இருக்குமாம். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், கணிணி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருமணம் மற்றும் வரவேற்பு என இரண்டுமே ஒரு நட்சத்திர விடுதியில் நடத்த இருக்கிறார்களாம்.
நாராயண மூர்த்தி மற்றும் கிருஷ்ணன் குடும்பத்தாருக்கும் ரோஹன் மூர்த்தி, அபர்னா தம்பதியினருக்கு நம் வாழ்த்துக்களைச் சொல்லுங்களேன்.


Click it and Unblock the Notifications