ஐடி துறையினை சேர்ந்த முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் அதன் ஜூன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
பெங்களுருவினை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் நிகரலாபம் ஜூன் காலாண்டில் 11.5% அதிகரித்து, 4,233 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,798 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும் மேலாக இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூபாய் சரிவினால் அதிக பலன் அடைந்துள்ளது. அதோடு சீரான ஒப்பந்தங்கள் காரணமாக அதன் வருவாய் 23,665 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 8.5% அதிகம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் இந்த காலத்தில் 1.74 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 1.65 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் டிஜிட்டல் வருவாய் 1,389 மில்லியன் டாலராக இருந்தது. இது மொத்த வருவாயில் 44.5% பங்களித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 41.9% பங்கினை வகித்தது குறிப்பிடத்தக்கது.
எங்களின் இந்த காலாண்டு முடிவுகள் குறிப்பாக வளர்ச்சி, எங்கள் சேவைகளில் இருக்கும் வணிக முன்னுரிமை பற்றிய ஆழமான புரிதலுக்கும் ஒரு தெளிவான சான்றாகும். அதோடு எங்களது ஊழியர்களின் அர்பணிப்பினையும் இது நிரூபிக்கிறது என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சலீல் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்கும்போது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை நோக்கமாக கொண்ட பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தோம். எங்கள் தொலை நிலை செயலாக்கங்களின் வேகம் மற்றும் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக வாடிக்கையாளர்கள் எங்களை அங்கீகரித்துள்ளனர் என்று சிஓஓ பிரவீன் ராவ் கூறியுள்ளார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக ஏற்றம் கண்டு வந்த இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது, தற்போது 8.59% ஏற்றத்துடன், 902.40 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் புதிய உச்ச விலையினை தொட்டிருந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இது கிட்டதட்ட 15% ஏற்றத்தினை காலையில் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.