இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
கடந்த வாரம் டிசிஎஸ் தனது காலாண்டு முடிவில் சந்தை கணிப்பைக் காட்டிலும் குறைவான லாபம் மற்றும் வருவாய் அளவீட்டைப் பதிவு செய்துள்ள காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் டிசிஎஸ் பங்குகள் சரிந்தது.
இந்நிலையில், இன்று டிசிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இன்போசிஸ் லாபம்
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் சுமார் 5,421 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும். இதுவே கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 4.3 சதவீதம் அதிகமாகும்.
இன்போசிஸ் வருவாய்
மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவீடு 20 சதவீதம் வரையில் அதிகரித்து 29,602 கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் இன்போசிஸ் 24,570 கோடி ரூபாய் அளவிலான வருவாயைப் பெற்று இருந்தது.
இன்போசிஸ் கணிப்பு
மேலும் 2022ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவீடு 16.5 முதல் 17.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கணித்துள்ளது இன்போசிஸ். மேலும் இந்நிறுவனத்தின் மார்ஜின் அளவு 22 முதல் 24 சதவீதம் வரையில் இருக்கும் எனவும் கணித்துள்ளது.
இன்போசிஸ் ஈவுத்தொகை
இதற்கிடையில் இன்போசிஸ் நிறுவனம் தனது பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்குச் சுமார் 15 ரூபாய் அளவிலான ஈவுத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளது. டிசிஎஸ் 7 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்திருந்த நிலையில் இன்போசிஸ் 2 மடங்கு அதிகத் தொகையை அறிவித்துள்ளது.
இன்போசிஸ் அட்ரிஷன் ரேட்
மேலும் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் என்பது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 13.9 சதவீதமாக இருந்தது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் வெளியேறியவர்களின் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய 45,000 பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது இன்போசிஸ்.