இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 5,076 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் மார்ச் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் 12 சதவீதம் அதிகரித்து 5,686 கோடி ரூபாயை பெற்றுள்ளது.
ஆனால் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் கோட்டை விட்டுள்ளது இன்போசிஸ்.
இன்போசிஸ் டிசிஎஸ்
இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் சந்தை கணிப்புகளைக் காட்டிலும் சற்று அதிகமாகவும். இந்த வாரத்தின் துவக்கத்தில் மார்ச் காலாண்டு முடிவை நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் வெளியிட்டது. டிசிஎஸ் இக்காலாண்டில் 7.4 சதவீதம் உயர்வில் 9,926 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தைக் காட்டிலும் இன்போசிஸ் லாப அளவில் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வருவாய்
மார்ச் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் 22.7 சதவீதம் உயர்ந்து 32,276 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 26,311 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2022 உடன் முடிந்த காலாண்டில் டிசிஎஸ் 15.75 சதவீத அளவிலான வருவாய் வளர்ச்சி மட்டுமே பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
டாலர் வருவாய்
மேலும் டாலர் அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் மார்ச் காலாண்டில் 4,280 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 18.5 சதவீதம் அதிகமாகும். இதோடு நிலையான நாணய அடிப்படையில் இன்போசிஸ் வருவாய் 20.6 சதவீதம் ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வருவாய் வளர்ச்சி கணிப்பு
இந்நிலையில் இன்போசிஸ் 2023ஆம் நிதியாண்டில் 13-15 சதவீதம் வருவாய் வளர்ச்சி பதிவு செய்யும் எனக் கணித்துள்ளது, ஆனால் நாணய மதிப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் கட்டாயம் இந்த அளவீட்டில் மாறுபாடு இருக்கும். இதோடு நடப்பு நிதியாண்டில் ஆப்ரேட்டிங் மார்ஜின் 21-23 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
வர்த்தகம்
இன்போசிஸ் மார்ச் காலாண்டில் மட்டும் சுமார் 2.3 பில்லியன் டாலர் அளவிலான புதிய வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்த நிதியாண்டில் சுமார் 9.5 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈவுத்தொகை
இன்போசிஸ் நிர்வாகம் இக்காலாண்டுக்கு ஒரு பங்கிற்கு ரூ.16 ஈவுத்தொகை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.15 இடைக்கால ஈவுத்தொகையுடன், 2022ஆம் நிதியாண்டுக்கான மொத்த ஈவுத்தொகை 31 ரூபாயாக உள்ளது.
13000 கோடி ரூபாய்
இது 2021ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 14.8 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம், இன்போசிஸ் நிறுவனம் தோராயமாக 13,000 கோடி ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அளிக்க உள்ளது.
ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்
டிசம்பர் காலாண்டில் 2,92,067 ஆக இந்த இன்போசிஸ் ஊழியர்கள் எண்ணிக்கை மார்ச் காலாண்டில் 3,14,015 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மார்ச் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 27.7% ஆக உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டில் அதாவது டிசம்பர் காலாண்டில் 25.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.