இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சலீல் பரேக்கினை மீண்டும் நியமித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதில் இருந்து, சிறப்பாக செயல்பட்டு வந்தார் சலீல், அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் நிறுவனம் அவருக்கே அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த பொறுப்பினை வழங்கியுள்ளது.
இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், மே 21 முதல் நடந்த கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு பிறகு, நிறுவனம் மீண்டும் சலீல் பரேக்கினை தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
பங்குகள் பரிசு
அதோடு நிறுவனம் சிறப்பாக செயல்பட்ட முக்கிய 6 பணியாளர்களுக்கு 1,04,000 பங்குகளையும், 88 மூத்த அதிகாரிகளுக்கு 3,75,760 பங்குகளையும் வழங்க நிறுவன வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனவரி 2018ல் சலீல் பரேக் பொறுப்பேற்றபோது, இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு சரியான நபர் என நந்தன் நீல்கேனி கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
பிரச்சனைகளில் இருந்து மீட்டவர்
4 ஆண்டுகளுக்கு பிறகு இணை நிறுவனர் என் ஆர் நாரயண மூர்த்திக்கும், அப்போதைய தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்காவுக்கும், இடையிலான பிரச்சனைக்கு மத்தியில், இன்ஃபோசிஸ்-ல் இருந்து பிரச்சனைகளை களைந்து, நம்பிக்கையை மீட்டெடுத்த நிலையில், சலீல் மீதான நிலகேனியின் நம்பிக்கை மேம்பட்டுள்ளதாக தெரிகிறது.
நம்பிக்கை நட்சத்திரம்
58 வயதான சலீல் பரேக், முன்னதாக கேப்ஜெமினியில் குழு நிர்வாக உறுப்பினராக இருந்தார். அங்கு அவர் 25 ஆண்டுகளாக தலைமை பதவியினை வகித்தவர், அதன் பிறகு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இணைந்தார். இங்கு நீலகேனியின் ஆதரவினை பெற்று தொடர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சியினை மேம்படுத்தியுள்ளார். இதற்கிடையில் தான் இன்ஃபோசிஸ்-ன் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.
மூன்று ஆண்டுகள் தேவை
சலீல் பதவியேற்ற பிறகு நிறுவனத்தினை மீட்டெடுக்க மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறியிருந்த நிலையில், முதல் ஆண்டில் நிலைப்படுத்திக் கொள்ளவும் 2வது ஆண்டில் build momentum , மூன்றாவது ஆண்டில் accelerate என்றும் கூறியிருந்தார். இதற்கிடையில் கொரோனா நெருக்கடியில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்தனர். இந்த காலகட்டத்தில் தேவையும் அதிகரித்த நிலையில் முதலீடுகளும் அதிகரித்துள்ளது.
வளர்ச்சி அதிகரிப்பு
இதற்கிடையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக போட்டி நிறுவனங்களை விட சிறப்பாக செயல்பட்டதால் வருவாய் இருமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் செயல்பாட்டின் மூலம் வருவாய் வலுவான வளர்ச்சி விகிதத்தினை எட்டியுள்ளது. வலுவான ஒப்பந்தங்களை எட்டியுள்ளது. சலீல் பொறுப்பேற்றதில் இருந்து இன்ஃபோசிஸ் பங்கானது 183% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.